ரணில் – சஜித் முக்கிய பேச்சுவார்த்தை இன்று

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய சந்திப்பு இன்று இரவு நடைபெறவுள்ளது. கட்சிக்குள் உருவாகி இருக்கும் முறுகல் நிலையை முடிவுக்குக்கொண்டுவரும் வகையில் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதித்தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் தனியாக இன்று இரவு சந்திக்கவிருக்கின்றனர்.

இவர்களின் இன்றைய சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப்போகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் கட்சி உயர்மட்டங்களுக்கிடையிலான சந்திப்பின்போது இருதரப்பினருக்குமிடையிலான பிரச்சினையை தீர்ப்பதற்கு இருதலைவர்களும் தனித்துப் பேசி முடிவுக்கு வரவேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப்பேச இருதரப்பும் இணக்கம் தெரிவித்திருக்கின்றன.

கட்சியின் வேட்பாளரை அறிவிக்கப்படாத நிலையில் ஜனநாயக தேசிய கூட்டணி அமைப்பதில் பெரும் பின்னடைவு கண்டிருப்பதாக கூட்டணி பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தினகரன் வார மஞ்சரிக்குத் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவர்களுடன் பேசி இறுதி முடிவெடுக்க ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பிட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்டக்கூட்டத்தில் சரியான தீர்மானம் எடுக்க முடியாது போனதால் நாளை திங்கட்கிழமை அக்கூட்டத்தை வைத்துக்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆலோசனை தெரிவித்தார்.

அதற்கிணங்க இன்றிரவு இருதலைவர்களும் நல்லதொரு இணக்கப்பாட்டுக்கு வரக் கூடிய சாதகங்கள் அதிகரித்திருப்பதாகவும் இருவரும் விட்டுக்கொடுப்புடன் கீழிறங்கிச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.

வேட்பாளராவதற்கு சஜித் பிரேமதாஸவுக்கு பிரதமர் விட்டுக் கொடுப்பதன் மூலம் கட்சியையும், அரசாங்கத்தையும் பாதுகாத்துக் கொள்ளமுடியுமெனவும் இதன் வெற்றியிலேயே ஜனநாயகத் தேசிய கூட்டணியின் வெற்றியும் தங்கி இருப்பதாகவும் அவர் வார மஞ்சரிக்குத் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸவுக்கு விட்டுக் கொடுப்பதன் மூலம் கட்சியிலோ, அரசாங்கத்திலோ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. எனவும் எதிரணி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டுமானால் கட்டாயமாக சஜித் பிரேமதாஸ களமிறக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். சில ஊடகங்கள் ஐக்கிய தேசியக் கட்சி உட்பூசலை ஊதிப்பெருப்பித்துக் கொண்டிருக்கின்றன. வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் இடம் பெற்ற சந்திப்பின் போது ரணில் பிடிவாதமாக இருந்தார் என்ற விதத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன.

எம்.ஏ.எம். நிலாம்

——

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆராயும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று இடம்பெற்றவிருந்த சந்திப்பை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் நிகழ்வுகளை உடனடியாக நிறுத்த முடியாத காரணத்தினால் சந்திப்பை நாளைமறுதினம் வரை அமைச்சர் சஜித் பிரேமதாச ஒத்திவைத்துள்ளார் என அறிய முடிகின்றது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை குறித்து இறுதி தீர்வு எட்டும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேரடியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில் இன்று இருவரையும் ஒரு மேசையில் அமர்த்தி தீர்வுகளை காண நடவைக்கை எடுப்பதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இடையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

அதற்கமைய இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சந்திப்பை நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் கூட கடந்த சனிக்கிழமை இந்த பேச்சுவார்த்தை திகதி பிட்போடப்பட்டுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாச ஏற்கனவே சில முக்கிய நிகழ்சிகளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவற்றை கைவிட முடியாது என்ற காரணிகளை கூறியதற்கு அமைய இந்த சந்திப்பு நாளை மறும் தினம் செவ்வாய்க்கிழமை வரையில் பிட்போடப்பட்டுள்ளது.

Related posts