அபராதத்தை நிவாரண நிதியாக தர விருப்பமில்லை : விஜய்

கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு ரூ.25 லட்சம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது என்று நடிகர் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராத தொகையை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், தனி நீதிபதி விதித்த தீர்ப்பை எதிர்த்தும், தான் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விஜய் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தவேண்டும் என்கிற உத்தரவை எதிர்க்கவில்லை, அதை மதிக்கிறோம். ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விஜய் தரப்பு மேல் முறையீடு செய்தது. இது வருமான வரி தொடர்பான விவகாரங்களை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்பட்டது. நுழைவு வரியை கணக்கிட்டு கூறுகிறோம். 2012 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி 20 சதவீத வரியை ஏற்கெனவே விஜய் செலுத்தியுள்ளார். அது போக மீதமுள்ள 80 சதவீத வரியை அவர் செலுத்தினால் போதும் என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் நுழைவு வரி பாக்கி 80 சதவீதத்தை 1 வாரத்தில் விஜய் செலுத்த வேண்டும். தனி நீதிபதி கூறிய விமர்சனங்களை நீக்க கோருவது குறித்து அடுத்தகட்ட விசாரணையில் முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு இன்று தனி நீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணை நடைபெற்றது. ரூ.1 லட்சம் அபராதத்தை ஏன் நிவாரணமாக வழங்கக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார். அப்போது அபராதமாக விதிக்கப்படும் ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று ஐகோர்ட்டில் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் கொடுத்துவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

Related posts