சிவகார்த்திகேயனுக்கு நாயகியாகும் ராஷ்மிகா?

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ராஷ்மிகாவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
புதுமுக இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவான தெலுங்குத் திரைப்படம் ‘ஜாதி ரத்னாலு’. முழு நீள நகைச்சுவைத் திரைப்படமான இதில் நவீன் போலிஷெட்டி, ப்ரியதர்ஷினி, ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தயாரிப்புச் செலவை விடப் பல மடங்கு அதிகமாக வசூல் செய்து சாதனையும் படைத்தது.
தற்போது அனுதீப் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது உறுதியாகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகிறது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் தெலுங்கிலும் அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியிலேயே இதன் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளது படக்குழு. இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தற்போது ‘டாக்டர்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, ‘டான்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

Related posts