உலகின் மிகப் பாரிய நீல மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினங்களின் நகரமான இலங்கையின் இரத்தினபுரி நகரத்தில் வீடொன்றின் கொல்லைப்புறத்தில் எதேச்சையாக இக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
கூலித் தொழிலாளி ஒருவர் மூலம் தனது வீட்டில் கிணறு ஒன்றிற்காக தோண்டியபோது, இக்கல் கண்டுபிடிக்கப்பட்டதாக தனது முழுப் பெயரை வெளியிடாத கமகே என அழைக்கப்படும் குறித்த கல்லின் உரிமையாளர் பிபிசி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
மிக மெல்லிய இளம் நீல நிறத்தில் காணப்படும் இக்கல், சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டொலர் (ரூ. 2,000 கோடி) வரையான பெறுமதியை கொண்டது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் எடை 510 கிலோகிராம் (2.5 மில்லியன் கரட்) என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட நீல மாணிக்கம் எனும் பொருள்பட “Serendipity Sapphire” (“செரண்டிபிட்டி சபையர்”) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

Related posts