எம்ஜிஆர் 104-வது பிறந்த நாளில் மோடி புகழஞ்சலி !

வறுமையை ஒழிக்க பலமுயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்” என்று அவரின் 104-வது பிறந்த நாளில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளான இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் எம்ஜிஆரின் சிலைக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
1917 இல் பிறந்த எம்.ஜி.ஆர், 1950களிலேயே தமிழ் சினிமாவின் புரட்சி நடிகராக பிரபலமாக அறியப்பட்டார். சி.என்.அண்ணாதுரை தலைமையிலான திமுகவில் சேர்ந்து தமிழக அரசியல் வானில் மின்னியவர் எம்ஜிஆர். அண்ணா இறந்த பின்னர் அப்போதைய திமுக தலைவரான மு.கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து 1972 ஆம் ஆண்டில் அவர் தனது சொந்தக் கட்சியை உருவாக்கினார்.
1987 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை தொடர்ச்சியாக மூன்று முறை தனது கட்சி வெற்றிவாய்ப்ப்பைப் பெற்றதன்மூலம் பின்னர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக பணியாற்றினார்.
எம்.ஜி.ஆர் தனது ஆட்சியின்போது வறுமையில் வாடும் குழந்தைகளுக்காக சத்துணவுத் திட்டம் உட்பட பல நலத்திட்டங்களை ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
“பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பலரின் இதயங்களில் வாழ்கிறார். அது திரை உலகமாக இருந்தாலும் அல்லது அரசியல்க இருந்தாலும், அவர் பரவலாக மதிக்கப்படுகிறார்.
தனது முதல்வர் பதவிக்காலத்தில், வறுமை ஒழிப்புக்கு அவர் பல முயற்சிகளைத் தொடங்கினார். மேலும் பெண்கள் அதிகாரம் குறித்தும் வலியுறுத்திவந்தார். எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் அதிகாரத்திற்கான முக்கிய போட்டியாளர்கள் ஆகும். ஆகையால், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக ஆளும் அதிமுகவுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.
நடைபெற உள்ள 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆளும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts