சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கவில்லை என்றால் ?

சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கவில்லை என்றால் போராடுவேன் என்று தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் இல்லாமல் அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நேற்றிரவு (நவம்பர் 11) முதலே இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தற்போது ‘சூரரைப் போற்று’ படத்தைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் கூறியிருப்பதாவது:
“சூரரைப் போற்று எல்லாத் துறைகளிலும் உயரே பறந்து கொண்டிருக்கிறது!
ஒரு கோபக்கார இளைஞனாக, ஆர்வமிகு இளம் தொழிலதிபராக, அன்பான கணவனாக அனைத்துக் காட்சிகளிலும் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தான் வரும் ஒவ்வொரும் ஃப்ரேமிலும் தனது முத்திரையைப் பதிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படம் முழுவதும் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிகேத் உடைய ஃப்ரேம்கள் ஓவியங்களைப் போல இருக்கின்றன. கலை இயக்குநர் ஜாக்கி மற்றும் எடிட்டர் சதீஷ் சூர்யா நிச்சயமாக உயரங்களைத் தொடுவார்கள்.
ஊர்வசி அற்புதமாக நடித்துள்ளார். அவர் தான் தோன்றும் காட்சிகளைத் தன் தோளில் சிரமமின்றி சுமந்து நம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்.
இது சூரரைப் போற்று அல்ல, சூர்யாவின் போற்று! அவர் மாறாவாகவே வாழ்ந்துள்ளார். இந்த வருடம் உங்களுக்காக தேசிய விருது காத்திருக்கிறது! இல்லையென்றால், நான் அதற்காகப் போராடுவேன்!
இறுதியாக, சுதா கொங்கரா! தொலைநோக்குப் பார்வை கொண்ட பெண். இந்தப் படைப்பின் மூலம் உச்சபட்ச நேர்த்தியைச் சம்பாதித்துள்ளீர்கள். சல்யூட்”.
இவ்வாறு கே.ஜே.ஆர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Related posts