போராட்டங்களுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் – ஒபாமா

போராட்டங்களுக்கு உடனடியாக அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிசில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர் போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கடந்த வாரம் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து 6-வது நாளாக நேற்று முன்தினம் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கருப்பர் இன மக்கள் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாகின. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

போராட்டக்காரர்களுக்கும், கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே நியுயார்க், சிகாகோ, பிலடெல்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் மோதல்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்து விரட்டியடித்தனர். 40 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே கூடி வந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். 15 மாகாணங்களிலும், வாஷிங்டனிலும் 5 ஆயிரம் தேசிய போலீஸ் படையினரும், உள்நாட்டு அவசர நிலைகளுக்கான ராணுவ படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன்பாக மீண்டும் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் கலவர தடுப்பு போலீசார் மீது கற்களை எறிந்ததால் பரப்பபு நிலவியது.

ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை மற்றும் ஃபிளாஷ் பேங்க்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி போலீசாரால் போராட்டக்காரர்கள் விரட்டப்பட்டனர். முக்கிய நகரங்கள் பல கலவரத்தால் மீண்டும் ஊரடங்கு நடவடிக்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 4 ஆயிரம் பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில்,

‘பல ஆண்டுகளாக காவல்துறை மற்றும் நீதித் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள தவறியதை இந்தப் போராட்டங்கள் உணர்த்துகின்றன. போராட்டங்கள் போராட்டக்காரர்களின் நியாயமான விரக்தியை எடுத்துரைக்கின்றன. அதே நேரத்தில் போராட்டங்கள் மிகவும் நேர்மையான முறையில் இருக்க வேண்டும். போராட்டத்தில் வன்முறை என்பது கண்டிக்கத்தக்கது. போராட்டக்காரர்கள் வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

எதிர்ப்பின் முக்கிய நோக்கம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நீதியைப் பெறுவதும் ஆகும். போராட்டத்தின் மூலம் அநீதியை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும். எதிர்ப்புகளின் பலன்களை சட்டங்கள் மற்றும் நடைமுறைகளாக மாற்ற வேண்டும். குற்றவியல் நீதி, காவல்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தப் போராட்டங்களுக்கு உடனடியாக அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Related posts