தேர்தலுக்கு முன்பே பாஜக வெற்றி

அருணாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் முன்பாக பாஜகவை வேட்பாளர்கள் இருவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. புதிய அரசை தேர்வு செய்வதற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பெமா காண்டு தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. அந்த சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜூன் -ம் தேதி முடிகிறது. அருணாச்சலில் சட்டப் பேரவை மற்றும் மக்களவைக்கு ஒரே நேரத்தில் ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் 4 லட்சம் பெண்கள் உட்பட மொத்தம் 7.94 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலில் 60 இடங்களுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 11-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 18-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிந்தது. நேற்று வேட்பு மனு பரிசீலனை முடிந்தது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற நாளை கடைசி நாள்.

இந்த நிலையில், அங்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆலோ கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சர் கெண்டோ ஜினியும், யாசூலி தொகுதியில் போட்டியிடும் எர் தபா தெதிருக்கும் எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வாகினர்.

வேட்பு மனு தாக்கல் முடிவடைந்ததால் அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. தேர்தல் ஆணையம் இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது. இதுகுறித்து பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Related posts