யாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம்

யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ்.மாநகர சபையின் யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கீகரித்துள்ளதுடன், அதற்கான நிதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்திற்கு 3நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் நேற்றுமுன்தினம் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டத்தில் கலந்துகொண்டார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

யாழ்.மாநகர முதல்வர் ஆர்னோல்ட் இந்தத் திட்டத்திற்கான மாதிரி வரைபை சமர்பித்திருந்ததுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதி ஒன்றை வழங்கினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நவீன நகரத் திட்டம் சிறந்த திட்டம். அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியைப் பெறுவதற்கான நிதி மூலங்களை தேடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அந்தக் கூட்டத்திலேயே இணக்கம் தெரிவித்தார்.

கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட், யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய நவீன நகரம் ஒன்றை சுமார் 293ஏக்கர் நிலபரப்பில் அமைப்பதற்கான திட்டம் ஒன்றை தயாரித்துள்ளோம்.

இதற்குத் தேவையான 293ஏக்கர் நிலப்பகுதி வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்ளது. கடந்த முறை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தபோது இந்தத் திட்டம் குறித்த முன்னோட்டத்தை கவனத்திற்குக் கொண்டு சென்றபோது, அதனை வரவேற்ற பிரதமர், உடனடியாகத் தன்னை வந்து சந்தித்து உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டிருந்தார்.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் ஆகியோருடன் பிரதமரைச் சந்தித்து திட்டம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தோம்.

அதில் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நிலம் வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தமைக்கு அமைவாக, பிரதமருடனான கலந்துரையாடல் நிறைவடைந்து. இரண்டு வாரங்களிலேயே வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் எமக்கு தேவையான 293ஏக்கர் நிலத்தை தமது ஆளுகையிலிருந்து விடுவித்து கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்தது.

அதற்கமைய கொழும்பிலிருந்து நிபுணர்களை அழைத்துவந்து அந்தக் காணிகளை அளவீடு செய்துள்ளதுடன், நவீன நகருக்கான மாதிரி ஒன்றையும் தயார் செய்துள்ளோம். அதனை நேற்று பிரதமர் த​லைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமர்ப்பித்தபோது, அதனை வரவேற்ற பிரதமர் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நிதி மூலத்தை தேடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் எனக் கூறினார்.

இதேவேளை, இந் நவீன நகரத்திற்குள் குடியிருப்புக்கள், கலாசார வலயம், கல்வி வலயம், சுகாதார வலயம், விளையாட்டு வலயம், தொழில் ஸ்தாபனங்கள், கலப்பு அபிவிருத்தி வலயம், விடுதிகள், உணவகங்கள் என சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்டு, தரம் வாய்ந்த வடிகால்கள், வீதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படும் என நவீன நகரம் தொடர்பான உத்தேச திட்டவரைபில் கூறப்பட்டிருக்கின்றது.

Related posts