உலகத் தலைவர்களில் பிரான்சிய அதிபர் எமானுவல் மக்ரொங்கின் புத்தாண்டு உரை ஊடகங்களில் கூடுதல் கவனத்தைப் பிடித்திருக்கிறது.
அவர் தனது உரையில் கூறிய கருத்துக்களின் முக்கியங்கள்..
இன்று நம் கண் முன்னால் நடக்கும் நிதர்சனங்களை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள பழகவேண்டும்.
ஒரு நாட்டை நல்லபடியாக நடத்த வேண்டுமென்றால் நாம் நல்லபடியாக நடக்க வேண்டும். தப்பான வழியில் சென்று நல்ல இலக்கை அடைய முடியாது.
நல்லபடி நடப்பதே நல்லதை உருவாக்கும் என்ற உலக யதார்த்தத்தை கண்கொண்டு பார்க்க வேண்டும்.
இன்றைய உலகம் எப்படிப் போகிறது.. உலக மக்கள் சந்தித்துள்ள சவால்கள் என்ன.. இவற்றுக்குள்ளால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன..?
இந்தக் காற்றுக்குள்ளால் நாம் போகக்கூடிய வேகம் இவ்வளவுதான்.
நமது கனவுகளும் பெருமைகளும் இங்கு முக்கியமல்ல இப்போது நாம் எப்படி வாழ்கிறோம், இந்த சூழலில் நம்மால் எதை செய்ய முடியும் என்ற யதார்த்தத்தை அனைவரும் உணர வேண்டும்.
அதைவிடுத்து தீவைப்பு, மஞ்சள் அங்கி போராட்டம் என்ற அர்த்தமற்ற பாதைகளால் ஒரு நல்ல தேசத்தை உருவாக்க முடியாது என்பதையே அவர் பூடகமாக சுட்டிக்காட்டினார்.
அவர் பேசும்போது மஞ்சள் அங்கி அணிந்தோரால் ஆர்பாட்டங்களுக்கு வரும்படி 9000 அழைப்புக்கள் முகநூல்களில் விடப்பட்டிருந்தது. பாரீஸ் நகரத்தை சுற்றி 12.000 போலீசார் காவலுக்கு நின்றனர்.
பிரான்சிய அதிபரின் உரை பிரான்ஸ் மக்களுக்கு பொருந்துமோ என்னவோ யதார்த்ததை உணராமலும், ஏற்றுக்கொள்ளாமலும், இருப்பதை இல்லை என்றும் இல்லாததை இருக்கிறதென்றும் பிடிவாதம் பிடிக்கும் புலம் பெயர் தமிழருக்கு தேவைப்படும் உரையாக இருக்கிறது.
2019 ஆண்டிலாவது புலம் பெயர் தமிழர் யதார்த்தத்தை புரிந்து, உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். இதை சொல்ல இங்கு இன்று யாரும் இல்லை. அந்தவகையில் பிரான்சிய அதிபரின் உரையை பயன்படுத்தலாம்.
எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு – குறள்
அலைகள் 01.01.2019 புதன்