அற்ற நீர் குளத்து அறு நீர் பறைவகளாயின முஸ்லீம் கட்சிகள் இரண்டு

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இருவர், நேற்று (04) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் கலந்துரையாடியுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோரே ஜனாதிபதியை சந்தித்துப் கலந்துரையாடியவர்கள்.

இவர்கள் இருவரும் கலைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் சந்தித்துப் கலந்துரையாடினார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை அளிப்பதாக றிசாட் பதியுதீன் தெரிவித்திருந்த நிலையில், அவருடைய கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததோடு, புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சுப் பதவியைப் பெறுவதற்கும் முயற்சித்ததாக ஊடகங்களில் நேற்று செய்தி ஒன்று பரவியது.

இந்த செய்திக்குப் பின்னரே, ஜனாதிபதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் சந்தித்திருந்தார்.

இதனை அடுத்து, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவரின் போட்டிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் சமகால அரசியல் குறித்து நேற்று கலந்துரையாடியதாக, முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனும் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.

இருந்த போதும், இந்த சந்திப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் எந்தத் தரப்பிலிருந்தும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 07 உறுப்பினர்களும், றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு 05 உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்சிகளின் தலைவர்கள் இருவரும் ஜனாதிபதியைச் சந்தித்தமையினை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷவுக்கு இவர்கள் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டினை எடுப்பார்கள் எனும் எதிர்பார்ப்பு அரசியலரங்கில் எழுந்துள்ளது.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்த வகையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 07 பாராளுமன்ற உறுப்பினர்கள், இதுவரை மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

Related posts