நடிகர் சிம்பு உருக்கமான பேச்சு

சென்னையில் நடைபெற்ற மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு உருக்கமாக பேசியுள்ளார்.

டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படத்தில் பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது. தீபாவளி அன்று திரைக்கு வர இருந்த இந்த திரைப்படம் சில பிரச்சினைகளால் நவம்பர் 25-ந்தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் சிம்பு பேசும்போது, ‘நான் மாநாடு படத்தில் நடிக்க காரணம் ‘அப்துல்காலிக்’ என்கிற கதாபாத்திரம் தான். இந்த படம் வெளியாவதற்குள் நான் அதிகமாக கஷ்டப்பட்டு விட்டேன். எனக்கு நிறைய பிரச்சினை கொடுக்கிறார்கள். படத்தை வெளியிடவிடாமல் தடுக்கிறார்கள்.

பல பிரச்சினைகளைத் தாண்டியே மாநாடு திரைப்படம் வந்துள்ளது. நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் ரசிகர்களாகிய உங்களுக்காகத்தான். இந்த பிரச்சினைகளை எல்லாம் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். ரசிகர்களாகிய நீங்கள் என்னை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கண்ணீருடன் பேசினார்.

மேலும் சில நிமிடம் பேச முடியாமல் மேடையிலேயே நின்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Related posts