சிம்பு ஒரு அற்புதமான குழந்தை: பாரதிராஜா

சிம்பு ஒரு அற்புதமான குழந்தை என்று இயக்குநர் பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (நவ.18) ‘மாநாடு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிலம்பரசன், எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது:
”இந்தப் படக்குழு எனக்கு நான்காவது தலைமுறை. சில சமயங்களில் இவர்களைப் பார்க்கும்போது எனக்கு பயம் வருகிறது. நாங்களும்தான் படங்கள் எடுத்தோம். ஆனால், இவர்கள் எப்படி எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பிரம்மாண்டமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் அழகாக இருக்கிறது. சிம்பு இந்தப் படத்தைத் தூக்கி நிறுத்திவிடுவார். எல்லாரும் சொல்வார்கள் சிம்புவைப் பற்றி. அவருடைய சில சேஷ்டைகள் எனக்குப் பிடிக்கும். அந்த சேஷ்டைகள் இல்லையென்றால் சிம்பு இல்லை.
சிம்புவுடன் ஒரு படம் நடித்தேன். அவர் ஒரு அற்புதமான குழந்தை. வெளியில் சொல்வதெல்லாம் சும்மா. அவர் மிகவும் அன்பான பையன். அவரோடு பணிபுரியும்போது நானும் அவரும் ஒன்று என்றே நினைத்துக்கொள்வேன்.ளையராஜா வீட்டுப் பிள்ளைகள், கங்கை அமரன் வீட்டுப் பிள்ளைகள், என் மகன் எல்லோரும் ஒன்று சேர்ந்தது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நானும் உங்களோடு சேர்ந்து அமர்ந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி. சுப்பு பஞ்சுவின் வீட்டு உப்பைத் தின்று வளர்ந்தவன் நான். பஞ்சு அண்ணனை இப்போது நினைத்தாலும் மனம் உருகிவிடும். இதையெல்லாம் பார்க்க அவர் இன்று இல்லை. நான், எஸ்.ஏ.சி எல்லாம் இவர்களோடு சேர்ந்து அமர்ந்திருப்பதற்குக் கொடுத்து வைத்திருக்கிறோம்”.
இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

Related posts