இன்று பிறந்த நாள்: நயன்தாரா அழகின் பரிணாம வளர்ச்சி

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிரபல நடிகை நயன்தாரா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டும் நயன்தாரா தனது பிறந்தநாளை தனது வருங்கால கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. நயன்தாரா தனது பிறந்தநாள் கேக்கை வெட்டும்போது மஞ்சள் நிற டாப் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து அழகாக இருக்கிறார், விக்னேஷ் அவரை கட்டிப்பிடித்து வாழ்த்துவதை காணலாம்.

நயன்தாரா மாடலாக ஷோபிஸில் தனது வாழ்க்கையைத் தொடங்கி, 2003-ம் ஆண்டு சத்யன் அந்திக்காடு டைரக்டு செய்த ‘மனசினக்கர’ என்ற மலையாள சினிமா மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் கவுரி என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக சினிமாவுக்குள் வந்த இவர், கேரளாவில் திருவல்லா என்ற பகுதியை சேர்ந்தவர். இயற்பெயர் டயனா குரியன். அடுத்த இரண்டு வருடங்களில் ஐயா என்ற படத்தில் சரத்குமாருடன் ஜோடி சேர்ந்தார். அதன் பிறகு அவரது திரை உலக வாழ்க்கையில் திரும்பிப்பார்க்க நேரமில்லை. வெற்றி மீது வெற்றிதான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் எல்லாம் நடித்துவிட்டார்.

‘மனசினக்கர’ சினிமாவை பார்த்துவிட்டு டைரக்டர் பி.வாசுவின் மனைவி சாந்தி ‘சந்திரமுகி’க்கு கணவரிடம் சிபாரிசு செய்தார். அதில் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நயன்தாராவும் புகழ்பெற்றார். அப்போது தமிழ் ரசிகர்கள் நயன்தாராவின் சொந்த ஊரான திருவல்லா வரை சென்று அவரது வீட்டை பார்த்துவிட்டு வந்த சம்பவங்களும் உண்டு. அடுத்து சிவாஜி படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்தார். அதில் அவரது நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ‘கதைபறையும்போள்..’ என்ற மலையாள படத்தின் ‘ரீமேக்’கான குசேலனிலும் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்கு கிடைத்தது.

சிம்புவுடன் நடித்த ‘வல்லவன்’ வெளிவந்த பின்பு நயன்தாராவை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வெளிவந்தன. உதட்டோடு உதடு பொருத்திக்கொடுத்த முத்தங்களும் விவாதமாகின. அப்போது சிம்புவும், நயன்தாராவும் காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இருவரும் இணைந்திருக்கும் போட்டோக்களும் வெளிவந்தன. பின்பு அதில் கசப்பு ஏற்பட்டுவிட்டது.

2010-ம் ஆண்டு அடுத்து சூடான செய்திகள் வெளிவந்தன. அப்போது நயன்தாரா கொடுத்த பேட்டியில், ‘நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவை தான் விரும்புவதாக’ சொன்னார். அப்போது கையில் பிரபுதேவாவின் பெயரையும் பச்சைக்குத்தியிருந்தார். அதற்கு அடுத்த விவாதம், அவர் இந்து மதத்திற்கு மாறியதாக எழுந்தது. சென்னையில் உள்ள ஆரிய சமாஜம் கோவிலில் அதற்கான சடங்கில் ஈடுபட்டு, நயன்தாரா என்ற பெயரை அதிகாரபூர்வமாக்கிக்கொண்டதாக கூறப்பட்டது. பிரபுதேவாவுடன் கொண்ட காதல் ஏகப்பட்ட சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் 2012-ல் ‘பிரபுதேவாவுடனான தொடர்பு முடிந்துபோய்விட்டது’ என்று நயன்தாராவே ரசிகர்களிடம் அறிவித்தார்.

நயன்தாராவின் வேகமான திரை உலக வளர்ச்சியில் 2011 மற்றும் 2012 காலகட்டம் வீழ்ச்சியைகொடுத்தது. கை நிறைய தமிழ் சினிமாக்களோடு வலம்வந்துகொண்டிருந்த அவர், அந்த காலகட்டத்தில் இரண்டு தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்தார். சோர்ந்தும் காணப்பட்டார். ஆனால் அடுத்த ஆண்டே புதுவேகம் கொண்டு மீண்டுவந்தார்.

2019-ம் வருடம் விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம், பிகில் என நயன்தாரா நடித்த ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியாகின. 2020-ம் வருடத் தொடக்கத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த தர்பார் வெளியானது. அடுத்ததாக ரஜினியுடன் மீண்டும் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்தார். கடந்த வருடம் நயன்தாராவை மையப்படுத்தி வெளியான மூக்குத்தி அம்மன், ஓடிடியிலும் ஹிட் ஆனது. நெற்றிக்கண் படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. அனைவரும் எதிர்பார்க்கும், காத்து வாக்குல ரெண்டு காதல் படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதுதவிர அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் உருவாகும் இந்திப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

அட்லியின் ராஜாராணி சினிமாவில் நடித்து, சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதினையும் பெற்றார். கதாநாயகர்களின் துணை இல்லாமலேயே சூப்பர் ஹிட் படத்தை வழங்கி ‘தென்னிந்தியாவின் சூப்பர் ஹீரோயின்’ என்ற பெருமையையும் பெற்றார். தமிழ் திரை உலகில் சில நடிகைகளுக்கே சொந்தமான அந்த பட்டம் நயன்தாராவுக்கும் கிடைத்தது. ‘மாயா’ என்ற அமானுஷ்ய படம் அதற்கு துணைபுரிந்தது. இதற்கிடையில் டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் நட்புறவு ஏற்பட்டது.

‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற படத்தின் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு சென்ற நயன்தாரா அதில் நிவின் பாலிக்கு ஜோடியானார். அடுத்து விஜய்யுடன் நடித்த பிகில், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த ‘சைரா நரசிம்க ரெட்டி’ போன்ற படங்கள் வரிசையாக வெளியாகின.

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்ஸர்ஸ் நிறுவனம், கூழாங்கல் என்கிற படத்தைத் தயாரித்துள்ளது. புதுமுகங்கள் நடித்த படத்தை பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இசை – யுவன் சங்கர் ராஜா. கூழாங்கல் படம், இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். இருவரும் ஒன்றாக இணைந்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடுவார் விக்னேஷ் சிவன். காதல் பற்றிய மறைமுகப் பதிவுகளும் அவ்வப்போது வெளிவரும். கடந்த ஜுன் மாதம் இன்ஸ்டகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அப்போது ரசிகர் ஒருவர், நயன்தாராவை ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை. அதற்காகக் காத்திருக்கிறேன் எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த விக்னேஷ் சிவன், திருமணத்துக்கு மிகவும் செலவாகும். எனவே திருமணத்துக்காக பணத்தைச் சேமித்து வருகிறேன். கொரோனா முடியவும் காத்திருக்கிறேன் என்றார்.

இன்று அவருக்கு பிறந்த நாள் . பல ஆண்டுகளாக அவர் சினிமாவுக்குள்ளும் வெளியேயும் அவரது பேஷன் தேர்வுகள் அற்புதமானவை . நயன்தாராவின் ஒவ்வொரு தோற்றமும் பேஷன் உலகில் ஒரு டிரெண்டிங்க்கை உருவாக்கியது. இன்று, நயன்தார நடுத்தர வயதை எட்டினாலும் பல ஆண்டுகளாக அவரது அழகு பல பரிணாமங்களை காட்டி உள்ளது.

Related posts