விஜய்யை வாழ்நாளில் மறக்க மாட்டோம்: கமீலா நாசர்

விஜய்யை வாழ்நாளில் மறக்க மாட்டோம் என்று கமீலா நாசர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் பெருந்தன்மை குறித்து நாசர் பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நாசர் தனது மூத்த மகன் ஃபைஸலுக்கு நேர்ந்த பயங்கர விபத்து குறித்துப் பேசியுள்ளார். அந்த விபத்துக்குப் பிறகு பழைய ஞாபகங்கள் அனைத்தையும் மறந்துவிட்டார் அவருடைய மகன்.
அவர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால், அவரைப் பற்றிய ஞாபகங்கள் மட்டுமே இருந்துள்ளன. விஜய்யின் பாடல்கள், படங்கள் பார்ப்பதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட விஜய் மிகவும் நெகிழ்ந்து, நாசரின் வீட்டுக்குச் சென்று அவருடைய மகனுடன் நேரம் செலவிட்டுள்ளார். மேலும், பிறந்த நாளன்று கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தனது பேட்டியில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார் நாசர். இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது. இதனைக் குறிப்பிட்டு நாசரின் மனைவி கமீலா நாசர், “தம்பி விஜய்யை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related posts