மீண்டும் சமரசப் பேச்சுவார்த்தையில் ஷங்கர் – வடிவேலு

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ தொடர்பான விவகாரத்தில் ஷங்கர் – வடிவேலு இருவருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.
அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்தது. பிறகு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது. இதனால் அவரால் இதர படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதற்குப் பிறகு ‘கத்தி சண்ட’, ‘மெர்சல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும், முழுமையாக அவரால் திரையுலகில் கவனம் செலுத்த முடியவில்லை.
‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் தொடர்பாகத் தயாரிப்பாளர்கள் சங்கம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் ஷங்கர் – வடிவேலு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், சுமுகமாக எந்தவொரு முடிவுமே எட்டப்படவில்லை. தற்போது இந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முறை ஷங்கர் – வடிவேலு இருவரிடமும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசி வருகிறார். இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னால் ஏற்பட்ட நஷ்டத் தொகையில் 4 கோடி ரூபாயை ஷங்கருக்கு வழங்க வடிவேலு சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகையை வழங்கியவுடன், ஷங்கர் – வடிவேலு இருவருமே சமரசம் செய்துகொள்ள இருக்கிறார்கள்.
இதனால் விரைவில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ மீண்டும் தொடங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஷங்கருக்கு பதிலாக வேறொரு தயாரிப்பாளர் தயாரிப்பாரா அல்லது ஷங்கரே மீண்டும் தயாரிப்பில் இறங்குவாரா என்பது விரைவில் தெரியவரும்.

Related posts