கொரோனா நோயாளியை தூக்கிச் சென்ற நபர்!

நேற்றிரவு (09) தீடீரென நோய்வாய்ப்பட்ட பெண் ஒருவரை அவரின் உறவினர்கள் அம்பாறை மத்திய முகாம் வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னர் சுகாதார பிரிவினரால் அவருக்கு என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதன்போது அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

குறித்த சம்பவத்தை அருகில் இருந்த நபர் ஒருவர் அவரது கைப்பேசியில் பதிவு செய்திருந்தார்.

குறித்த நபர் நோயாளியான பெண்ணை கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையிலும் அவருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

——-

நாட்டில் மேலும் 2,142 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை 215,538 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,811 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 182,238 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts