தடுப்பூசிகளைச் செலுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்து

கரோனாவுக்கான தடுப்பூசிகளைச் செலுத்தாமல் தளர்வுகளை அறிவித்தால் ஆபத்தில்தான் முடியும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறும்போது, “நாங்கள் தொடர்ந்து கரோனா பரவலைக் கண்காணித்து வருகிறோம். இன்னும் பல நாடுகள் ஆபத்தில்தான் உள்ளன. கரோனா தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்தாமல் தளர்வுகளை அமல்படுத்துவது ஆபத்தில்தான் முடியும்.
வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒவ்வொரு நாடும் தங்கள் மக்கள்தொகையில் 10% மக்களுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும். வருட இறுதியில் இந்த எண்ணிக்கை 30% ஆக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் கரோனா தடுப்பூசியைப் பெரும்பாலான அளவில் செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.

Related posts