நாமல் ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு அமைச்சுப் பதவி

டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, நாமல் ராஜபக்ஷ, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாமல் ராஜபக்ஷ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
—-
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எதிர்வரும் வாரம் முதல் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் செயற்படுத்தப்படுமென போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். நாடு முழுவதும் தற்போது அமுலிலுள்ள பயணத்தடை தளர்த்தப்பட்டன் பின்னர் பொதுப் போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
—–
வைத்திய நிபுணர்கள் கூறுவதைப்போல் வருடம் பூராகவும் நாட்டை முடக்கி வைத்துக்கொண்டிருக்க முடியாது எனவும் நாளொன்றுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக மாத்திரம் 800 இலட்சம் ரூபா செலவாவதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவது அவசியமானதே, ஆனால் அதைவிடவும் நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டில் பரவிக்கொண்டுள்ள கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது நாடு முடக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்காலிக முடக்கத்தை சாதகமான பெறுபேறுகளாக வெளிப்படுத்தி எம்மால் தொடர்ந்தும் நாட்டினை முடக்கி மக்களை வீடுகளுக்குள் அடைத்து வைக்க முடியாது.

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் அதே வேளையில் மக்களின் நாளாந்த வாழ்க்கை முறைமைக்கும் இடமளிக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் மக்களின் செயற்பாடுகள் பிரதானமானது. மக்கள் தமது பாதுகாப்பை முதலில் உறுதிப்படுத்த வேண்டும்.

பொறுப்பான மக்களாக அவர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும். அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல்களை விடுக்க முடியும், கட்டுப்பாடுகளை பிறப்பிக்க முடியும். ஆனால் அவற்றை பின்பற்ற வேண்டியது பொதுமக்களின் கடமையாகும். மக்கள் சட்டத்தை, விதிமுறைகளை மீறுவதானால் அது மக்களையே இறுதியாக பாதிக்கின்றது.கொவிட் என்பது உலகளாவிய ரீதியில் தாகத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு தொற்றாகும்.நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இவ்வாறு ஒரு அழிவு வந்தது. இப்போது மீண்டும் அவ்வாறான அழிவொன்று ஏற்பட்டுள்ளது. இதில் ஏனைய நாடுகளை போன்றே நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகவே இந்த தாக்கங்களுக்கு யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது.

ஏனைய நாடுகளை விடவும் நாம் பாதுகாப்பான நிலையில் உள்ளோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல நாட்டின் சுகாதாரத்துறை வீழ்ச்சி காண்பதைப்போல் அல்ல, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டால் பாரிய நெருக்கடியை சகலரும் எதிர்கொள்ள நேரிடும்.

நாளொன்றுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக மாத்திரம் 800 இலட்சம் ரூபா செலவாகின்றது. ஏனைய சகல சுகாதார செயற்பாடுகளுக்கும் கோடிக்கணக்கான பணம் செலவாகின்றது. எனவே நாட்டை முடக்குவது என்பது முழுமையான முடக்கமாக இருக்கக்கூடாது. தொற்றாளர்களை மாத்திரம் வீடுகளில் முடக்கிவிட்டு சாதாராண நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும். ஜனாதிபதியும், இராணுவத் தளபதியும் அதிகளவில் பொறுப்பை சுமந்துகொண்டு தீர்மானங்களை எடுக்கின்றனர். நாம் அதற்கான முழுமையான ஒத்துழைப்புகளை கொடுக்கின்றோம் என்றார்.
—-
ஹட்டன் காமினிபுர பகுதியில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவரின் வீட்டில் 11 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தலவாக்கலை, கட்டுக்கெலே தோட்டப் பகுதியில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவரின் வீட்டில் 13 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படாமையினால் குடுப்பத்தினருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts