40 ஆண்டில் இல்லாத வகையில் ஜிடிபி மைனஸ் 7.3% ஆக சரிவு

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த நிதி ஆண்டில் (2020-21) மைனஸ் 7.3 சதவீதமாக சரிந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) தகவல் வெளியிட்டது. இது தொடர்பாக மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:
நம் நாட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையைவிட மிகவும் ஏழ்மை நிலைக்கு பலர் தள்ளப்பட்டுவிட்டனர். இதற்கு மத்திய அரசு நிதி நிலையை மோசமாகக் கையாண்ட விதம்தான் முக்கியக் காரணமாகும். கரோனா பரவலுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொருளாதாரம் மீட்சியடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டது. கரோனா முதல் அலை அடங்கிய சூழலில் மக்களுக்கு நேரடி நிதி உதவிகளை அளித்து பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்த கோரிக்கைகளை மத்திய அரசு கேட்கவேயில்லை.
இந்நிலையில், கடந்த நிதி ஆண்டில் நாட்டின் ஜிடிபி மைனஸ் 7.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். இதன்மூலம் இந்த நிதி ஆண்டு கருப்பு ஆண்டாகி உள்ளது.
கரோனா வைரஸ் பரவலால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதைக் கையாள்வதற்கான நிர்வாகத் திறன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.-பிடிஐ

Related posts