கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று வடிவேல் பிடிவாதம்

சென்னைக்கு வந்து நடிகர்-டைரக்டர்-தயாரிப்பாளர் ராஜ்கிரண் அலுவலகத்தில் வேலை செய்தது பழைய கதை.

மதுரையில் கூலித்தொழிலாளியாக இருந்த வடிவேல் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து நடிகர்-டைரக்டர்-தயாரிப்பாளர் ராஜ்கிரண் அலுவலகத்தில் வேலை செய்தது பழைய கதை. அதே ராஜ்கிரண் கருணையினால் அவர் இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில், ஒரு சின்ன வேடத்தில் தலையை காட்டினார். அடுத்து ராஜ்கிரண் இயக்கிய ‘அரண்மனை’ படத்தில் நகைச்சுவை நடிகர் ஆனார்.

படிப்படியாக வளர்ந்த அவர், முன்னணி நகைச்சுவை நடிகராக-ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்குகிற அளவுக்கு வளர்ந்தது, அவருடைய அதிர்ஷ்டம். டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் கதாநாயகன் ஆனது, வடிவேலின் பேரதிர்ஷ்டம்.

அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்,’ ‘தெனாலிராமன்’ ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். அப்போது அவரை தேடி வந்த நகைச்சுவை வேடங்களை உதறி தள்ளினார். ‘‘இனிமேல் கதாநாயகனாகத்தான் நடிப்பேன்’’ என்று தன்னை தேடி வந்த தயாரிப்பாளர்களிடமும், டைரக்டர்களிடமும் பிடிவாதமாக இருந்தார்.

இந்த நிலையில்தான் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க டைரக்டர் ஷங்கர் முன்வந்தார். வடிவேல் கேட்ட சம்பளத்தை கொடுக்க ஷங்கர் முன்வந்ததால், அந்த படத்தில் நடிக்க வடிவேல் சம்மதித்தார். படப்பிடிப்பும் தொடங்கியது.

‘‘அதன்பிறகே வடிவேலின் ஆட்டம் ஆரம்பமானது. படப்பிடிப்பின்போது, ‘‘அந்த வசனத்தை மாற்று…இந்த காட்சியை மாற்று’’ என்று டைரக்டர் சிம்புதேவனிடம் திருத்தம் சொல்ல ஆரம்பித்தார்.

அவருடைய ‘பந்தா’வினால் அந்த படம் பாதியில் நின்று போனது. வடிவேல், ஷங்கர் ஆகிய 2 பேரிடமும் சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதில் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை’’ என்கிறார்கள் படக்குழுவினர்.

Related posts