தமிழ் சினிமாவுக்கே ஒரு புதிய முயற்சி – ‘மாநாடு’

மாநாடு’ தமிழ் சினிமாவுக்கே ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இன்னும் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. இதனை எங்கு படமாக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறது படக்குழு. இதுவரை முடிக்கப்பட்ட காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வெங்கட்பிரபு ‘மாநாடு’ குறித்து கூறியிருப்பதாவது:
படம் சிறப்பாக வந்துள்ளது. இது ஒரு புது முயற்சி. தமிழ் சினிமாவுக்கே இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும். ‘மாநாடு’ படத்துக்கும் ‘டெனெட்’ படத்துக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. இது முற்றிலுமாக வேறு வகையைச் சேர்ந்த திரைப்படம். இதில் சிலம்பரசன் நடிப்பதால் இதற்கான வரவேற்பு மிகப்பெரியதாக இருக்கும்.
இவ்வாறு வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

Related posts