நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா பாதிப்பு

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா பாதிப்பு எற்பட்டு உள்ளது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியான ஆண்ட்ரியா, `பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் சரத்குமார் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து கமல்ஹாசன், தனுஷ், சிம்பு, பஹத் பாசில் உள்பட பல கதாநாயகர்களின் ஜோடியாக நடித்தார். கதாநாயகி, வில்லி என எந்த பாத்திரம் கொடுத்தாலும் அதில் பிரகாசிக்கிற ஆண்ட்ரியா, பல படங்களில் பாடியும் இருக்கிறார்.

இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: “கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. என்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி. தற்போது நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related posts