பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள, ரிஷாட் பதியுதீன் எம்.பி. பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வது தொடர்பில் எவ்வித சட்ட சிக்கல்களும் இல்லை என, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் CIDயினர் சட்ட மாஅதிபரிடம் கோரிய ஆலோசனைக்கு அமைய, சட்ட மாஅதிபர் குறித்த அறிவித்தலை வழங்கியுள்ளதாக, சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டு, 90 நாள் தடுப்புக் காவல் அனுமதிக்கமைய, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
—–
நீதியமைச்சு சம்பந்தமான செய்திகளை நீதியமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளரே ஊடகங்களுக்கு வழங்க முடியும் என்றும் அதுவே உத்தியோகபூர்வமானது எனவும் நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டால் நீதியமைச்சர் அல்லது நீதியமைச்சின் செயலாளரினால் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நீதிமன்றங்கள் மற்றும் நீதியமைச்சின் செயற்பாடுகள் சம்பந்தமாக வேறு தரப்பினர் மூலம் வெளியிடப்படும் செய்திகள் மற்றும் தகவல்கள் உத்தியோகபூர்வமற்றவை எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கான பொறுப்பை நீதியமைச்சு ஏற்காது எனவும் அது தொடர்பில் ஊடக நிறுவனங்கள் கவனம் செலுத்துவது முக்கியம் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற நிர்வாகம் தொடர்பில் முழுமையான பொறுப்பு நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கே உள்ளது. அவற்றில் நீதியமைச்சு தலையிடுவதில்லை. அதற்கிணங்க நீதிமன்றம் தொடர்பான செய்திகள் நீதிச்சேவை ஆணைக்குழு ஊடாகவே ஊடகங்களுக்கு வழங்கப்படும். அவ்வாறில்லாவிட்டால் நீதிச்சேவை ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் நீதி அமைச்சு அதனை ஊடகங்களுக்கு வழங்கும். அதனைத் தவிர நீதிமன்றம் சம்பந்தமாகவோ அல்லது நீதி அமைச்சு சம்பந்தமாகவும் வேறு தரப்பினர் மூலம் வெளியிடப்படும் செய்திகள் உத்தியோகபூர்வமற்றவை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
—–
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல. இன்று இது, உங்களுக்கு முன்னமே பிறந்தவர்களால், நிறைய வளர்த்து விடப்பட்டிருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
பலநூறு, ஆயிரம் புத்தம் புதிய வழிகளை, சந்தர்ப்பங்களை இன்று உலகம் உங்களுக்கு தினந்தோறும் வாரி வழங்குகிறது. ஆகவே சந்தோஷத்தையும், கவலையையும் ஒருசேர ஓரிரு நாட்களில், ஓரமாக வைத்து விட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி, காரியத்தில் கண்ணாக நகருங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் தொடர்பில் கருத்து கூறிய அவர் மேலும் கூறியுள்ளதாவது,
உயர்தரப் பரீட்சை எழுதி அதில் பலன் பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள். முயற்சிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
பெறுபேறு என்பது ஒரு புள்ளிவிபரம். அது எதுவானாலும், அதைக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள். வானம் பரந்து, விரிந்து, திறந்திருக்கின்றது.
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல. இன்று இது, உங்களுக்கு முன்னமே பிறந்தவர்களால், நிறைய வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. பலநூறு, ஆயிரம் புத்தம் புதிய வழிகளை, சந்தர்ப்பங்களை இன்று உலகம் உங்களுக்கு தினந்தோறும் வாரி வழங்குகிறது.
அந்த வகையில் நீங்கள், உங்களுக்கு முன்னர் பிறந்தவர்களை விட அதிஷ்டசாலிகள். ஆகவே, சந்தோஷத்தையும், கவலையையும் ஒருசேர ஓரிரு நாட்களில், ஓரமாக வைத்து விட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி, காரியத்தில் கண்ணாக நகருங்கள் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.