ஷங்கருக்கு அந்நியன் படத்தயாரிப்பாளர் நோட்டீஸ்

இயக்குநர் ஷங்கருக்கு அந்நியன் படத்தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
2005-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் அந்நியன். இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி ரன்வீர் சிங் நடிப்பில் பென் ஸ்டுடியோஸ் ஜெயந்திலால் தயாரிப்பில் அந்நியன் இந்தி ரீமேக்கை இயக்குகிறார் ஷங்கர். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் குறித்த விவரத்தை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் அந்நியன் படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும் ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை ஷங்கர் பெறவில்லை என்றும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது,

அந்நியன் இந்தி ரீமேக் செய்யப்படுவதாக வெளியான தகவல் குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சுஜாதாவிடம் அந்தக் கதையை முழு தொகை கொடுத்து நான் வாங்கி வைத்திருக்கிறேன். என்னிடம் தான் முழு உரிமை இருக்கிறது. ரீமேக் செய்ய வேண்டும் என்றால் என்னிடம் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் ரீமேக் செய்தால் அது சட்டப்படி குற்றம்.

பாய்ஸ் படம் தோல்வியடைந்து உங்கள் இமேஜூக்கு பாதிப்பு வந்தபோது நான் தான் அந்நியன் பட வாய்ப்பை உங்களுக்கு கொடுத்து பழைய நிலைக்கு கொண்டு வந்தேன். ஆனால் இப்போது நீங்கள் என்னை தவிர்த்துவிட்டு அந்நியனை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது உங்களது கீழ்த்தரமான மனநிலையை காட்டுகிறது என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related posts