மதத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை: சிம்பு

மதத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிப்ரவரி 3) சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘மாநாடு’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் படம் தொடர்பாக சிம்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
“எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். சிவனை ரொம்பப் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மதத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை. இந்தக் கடவுள், அந்தக் கடவுள் என்றில்லாமல் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கிறேன். இந்தச் சமூகத்தில் பொதுவாகவே இஸ்லாமியர்கள் மீது ஒரு பார்வை இருக்கிறது. அதை மாற்றுவதற்கு ஏதாவது ஒன்று பண்ண வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன்.
இந்தப் படத்தில் அந்த விஷயத்தைப் பேசுவதற்குக் கதை சரியாக அமைந்தது. அதற்காகவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். வழக்கமான ஒரு கதையாக அல்லாமல், வித்தியாசமாக இருக்கும். எந்த மொழியிலும் நல்லதொரு படம் வெளியானால் இந்தியாவில் கொண்டாடுவார்கள். அப்படியொரு படமாக ‘மாநாடு’ இருக்கும்”.
இவ்வாறு சிம்பு தெரிவித்தார்.

Related posts