பல ஸ்டுடியோக்கள் இன்று இல்லை, பிரசாத் ஸ்டுடியோவும்..

சென்னையில் தனது புதிய ஸ்டுடியோவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார் இளையராஜா.
சென்னை கோடம்பாக்கத்தில் புதிய ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார் இளையராஜா. அதில் தனது படத்தின் பணிகளை இன்று (பிப்ரவரி 3) தொடங்கினார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி – விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பாடல் ரெக்கார்டிங் பணிகளைத் தொடங்கியுள்ளார் இளையராஜா.
இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நேரில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த ஸ்டுடியோவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் இளையராஜா.
அப்போது அவர் பேசியதாவது:
“சென்னையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிப் படங்கள் தயாராகி வெளியே போய்க் கொண்டிருந்தன. அவ்வப்போது இந்திப் படங்களும் தயாராயின. இங்கிருந்த ஸ்டுடியோக்கள் வேறு எங்கும் இல்லை. அந்தச் சமயத்தில் ஆசியாவிலேயே பெரிய ஸ்டுடியோவாக விஜயா வாஹினி ஸ்டுடியோ இருந்தது. அந்த ஸ்டுடியோவை இன்று காணோம். ஜெமினி ஸ்டுடியோ, சாரதா ஸ்டுடியோ, கோல்டன் ஸ்டுடியோ, ஏவிஎம் ஸ்டுடியோ, விஜயா கார்டன் எனப் பல ஸ்டுடியோக்கள் இன்று இல்லை. இந்த வரிசையில் பிரசாத் ஸ்டுடியோவும் சேர வேண்டும் என்று வெளியே வந்துவிட்டேன்.
என்னுடைய சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை வைத்து இந்த இடத்தை வாங்கி, ஸ்டுடியோவை ஆரம்பித்திருக்கிறேன். மாறிக்கொண்டே இருக்கும் இந்தத் திரையுலகில், தலைமுறைகளைக் கடந்து இசை சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த ஸ்டுடியோ இன்று ஆரம்பமாகிறது. வெற்றிமாறனின் புதிய படத்துக்கான பாடல் பதிவுடன் தொடங்குகிறது. அந்தப் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் சில வேலைகள் பாக்கியுள்ளதால், முழுவீச்சில் ஒரு வாரத்தில் பணிகள் தொடங்கும். இன்றைய நவீனத் தொழில்நுட்பம் அனைத்தும் இந்த ஸ்டுடியோவில் உள்ளன”.
இவ்வாறு இளையராஜா பேசினார்.
பின்பு பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
40 வருடங்களாக பிரசாத் ஸ்டுடியோவில் இருந்தீர்கள்? வருத்தம் உள்ளதா?
கடந்து வந்த வாழ்க்கைக்கு வருத்தப்பட முடியுமா? அதற்கெல்லாம் இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் வேலை செய்ய முடியாது. அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். முன்னேறுபவர்களைத் தடுக்க இடைஞ்சல்கள் வரும். நம் வேலையை முயற்சியுடன் செய்யும்போது, அடையும் இடமே வேறு மாதிரி இருக்கும்.
இன்றைய படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?
ஏனென்றால் பாடல்கள் அப்படி இருக்கின்றன. அதனால்தான் பாடல்களுக்கு முக்கியத்துவமில்லை. பாடல்தான் முக்கியத்துவத்தை எடுக்க வேண்டுமே தவிர, நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது. பாடல்கள் ரசிகர்களைப் பிடித்து இழுக்க வேண்டும்.
இவ்வாறு இளையராஜா பதில் அளித்தார்.

Related posts