நினைவு இல்லமான ஜெயலலிதா வாழ்ந்த வீடு

நினைவு இல்லமான ஜெயலலிதா வாழ்ந்த வீடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய ‘வேதா நிலையம்’ வீட்டை நினைவு இல்லமாக மாற்றவேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அவ்வாறு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தொடர்ந்து சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவினர் வேதா நிலையத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக என்னென்ன ஏற்பாடுகளை செய்யலாம் என்பது குறித்து 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் இதுதொடர்பான பரிந்துரையை அந்த குழுவினர் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிந்துரையின்படி ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. வீட்டுக்கு வர்ணம் தீட்டப்பட்டு, பொருட்கள் வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்துவந்தன. அந்த பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டன.

‘வேதா நிலையம்’ 10 கிரவுண்டு பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ளது. அந்த இல்லத்தில் நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும். 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடை கொண்ட 867 வெள்ளி பொருட்களும், வெள்ளி பாத்திரங்களும் உள்ளன.

சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் கருப்பு-வெள்ளை அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், ஜெயலலிதாவின் ஆளுமையை பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப்பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நினைவு இல்லமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள ‘வேதா நிலையம்’ இல்லத்தை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தலைமைச்செயலாளர் க.சண்முகம், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் க.மணிவாசன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் சென்னை கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல திருவுருவச் சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

பின்னர் வீட்டுக்குள் சென்ற முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் நினைவில்லத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டனர். வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த ஆளுயர குத்து விளக்கை முதலமைச்சர், துணை முதலமைச்சர், சட்டப்பேரவை தலைவர் தனபால், தலைமை செயலாளர், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஏற்றி வைத்தனர். வேதா நிலைய நினைவில்லம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதையடுத்து வீட்டுக்கு வெளியில் உள்ள பெயர் பலகையும் திறந்து வைக்கப்பட்டது.

விழா முடிந்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் புறப்பட்டதும், சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி வேதா நிலையம் மூடப்பட்டது. பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள உயர்கல்வி மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். டிரோன் மூலம் இயக்கி, ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது.

விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;

சோதனைகளை வென்று காட்டியவர் ஜெயலலிதா என்றும் பெண்கள், குழந்தைகளுக்கு அரணாக தமிழக அரசு இருக்கிறது என்றும் கூறினார். மேலும் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 24ல் ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும். சென்னை மெரினாவில் திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படும் என தெரிவித்தார்.

Related posts