செல்வராகவன் – தனுஷ் இணையும் நானே வருவேன்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கு ‘நானே வருவேன்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
‘என்.ஜி.கே’ படத்துக்குப் பிறகு, தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளார் செல்வராகவன். தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இந்தப் படத்துக்கான லுக் டெஸ்ட்டை முடித்துவிட்டார் தனுஷ். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தின் தலைப்பு வடிவமைப்பு இன்று (ஜனவரி 13) இரவு 7:10 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது.
அதன்படி, ‘நானே வருவேன்’ என்ற தலைப்புடன் அடங்கிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. தனுஷ் – செல்வராகவன் கூட்டணி ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது தனுஷுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன், எடிட்டராக பிரசன்னா ஜி.கே ஆகியோர் பணிபுரிகின்றனர்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் படத்துக்குத் தேதிகள் ஒதுக்குவார் எனத் தெரிகிறது.

Related posts