பிரசாத் ஸ்டூடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு அனுமதி !

பிரசாத் ஸ்டூடியோவுக்குள் இசையமைப்பாளர் இளையராஜா செல்லலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கு ‘ரிக்கார்டிங்’ தியேட்டராக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த அரங்கை வேறு தேவைக்கு பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு செய்தது. அதனால் இடத்தை காலி செய்ய இளையராஜாவை வலியுறுத்தியது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது குறித்து இளையராஜா சென்னை ஐகோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “பிரசாத் ஸ்டூடியோவில் இத்தனை ஆண்டுகள் இசையமைத்த அரங்கில் ஒரு நாள் சென்று தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும். கைப்பட எழுதிய இசை கோப்புகள், இசை கருவிகள், தனக்கு கிடைத்த விருதுகள் ஆகியவை அங்கு உள்ளது. அதை எடுத்துக்கொள்ள அனுமதிக்க ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிடவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இது குறித்து பிரசாத் ஸ்டூடியோ தரப்பினர் நீதிமன்றத்தில் அளித்த பதில் மனுவில், இளையராஜாவின் பொருட்கள் அனைத்தும் ஸ்டூடியோவில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அவர் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் பொருட்களை எடுத்துக்கொள்ள இளையராஜாவை அனுமதித்தால் ரசிகர்கள் அதிக அளவில் கூடி விடுவார்கள் என்பதால் அவருக்கு பதிலாக அவரது பிரதிநிதிகள் வந்து பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இசையமைப்பாளர் இளையராஜாவை சில நிபந்தனைகளுடன் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க தயார் என பிரசாத் ஸ்டூடியோ தரப்பு தெரிவித்தது. பிரசாத் ஸ்டூடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோர கூடாது, ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகள் பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா இன்று அறிவித்தார். இது வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா அளித்துள்ள பதில் மனுவில், ஸ்டூடியோ இடத்தில் உரிமை கோர மாட்டேன் என்றும் ஸ்டூடியோவில் உள்ள தமது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றதால் ஸ்டூடியோவுக்குள் இசையமைப்பாளர் இளையராஜா செல்லலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் இளையராஜா இருக்கலாம் என்றும் பிரசாத் ஸ்டூடியோவுடன் ஆலோசித்து இசைக்கருவிகளை எடுக்கும் தேதியை இளையராஜா முடிவெடுக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts