தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத அனுஷ்கா

சமீபத்தில் தான் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மறைந்த இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா பற்றிப் பேசுகையில் நடிகை அனுஷ்கா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

தெலுங்கு ஈடிவியில் கேஷ் என்ற விளையாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தெலுங்கு பேசும் மக்களிடையே மிகப் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் சுமா இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். இதில் நிசப்தம் திரைப்படக் குழுவினர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பானது. இதில் அனுஷ்கா, சுப்பராஜு, இயக்குநர் ஹேமந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் அனுஷ்காவின் திரை வாழ்க்கை குறித்து நிறையக் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு அனுஷ்கா வெளிப்படையான பதில்களைத் தந்து சுவாரசியப்படுத்தினார். அப்படி, அனுஷ்காவின் திரைப் பயணம் குறித்து காணொலித் தொகுப்பு ஒன்றி நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

இதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட அனுஷ்கா, இயக்குநர் கோடி ராமகிருஷ்ணாவின் இழப்பை, தான் இந்தத் தருணத்தில் அதிகமாக உணர்வதாகவும் அவர் இன்னும் சில நாட்கள் நம்மிடம் இருந்திருக்கலாம் என்றும் நினைப்பதாகக் கூறினார். இதைப் பேசிக்கொண்டிருக்கும் போது கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட ஆரம்பித்தார்.

அனுஷ்கா ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது. அனுஷ்கா தெலுங்கில் நடித்த முதல் படம் சூப்பர். இதன் இயக்குநர் பூரி ஜெகந்நாத். ஆனால் அனுஷ்காவுக்கு அதிக புகழையும் அடையாளத்தையும் தேடித் தந்த திரைப்படம் ’அருந்ததி’. இதன் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா. கடந்த வருடம் கோடி ராமகிருஷ்ணா காலமானது நினைவுகூரத்தக்கது.

Related posts