கொரோனா எனத் தெரிந்தும் பொய் கூறியவர் மீது வழக்கு!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாக தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருதி மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

மக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவது நோய் பரவுவதற்கு காரணமாகும் என அறிவுறுத்தப்பட்டிருந்தபோதும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குழுக்களாக நாட்டினுள் பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உள்நாட்டுப் பிரஜைகளும் சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய ஒன்றுகூடல்கள் நிறுத்தப்படவேண்டியுள்ளது.

மக்கள் நடமாடும் இடங்களில் சுமார் ஒரு மீற்றர் தூரத்தில் தனிநபர் இடைவெளியை பேணுமாறு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் பேணுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

பஸ் மற்றும் புகையிரத சேவை நடைமுறையில் உள்ள சந்தர்ப்பங்களில் இந்த நடைமுறையை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பேணுவதற்காக பஸ் வண்டியிலும் புகையிரதத்திலும் பயணிகள் பயணம் செய்வதற்கான எண்ணிக்கையில் அரைவாசி எண்ணிக்கையானோர் மட்டுமே பயணிக்க முடியும்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை சதொச கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் உள்ளிட்ட விற்பனை நிலையங்களுக்கு போதுமானளவு அரசாங்கம் விநியோகித்துள்ளது.

மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகாத வகையில் அவற்றை விநியோகிக்குமாறு அந்த விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (23) முற்பகல் 6.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அதனை அமுல்படுத்துவது குறித்து (22) ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு அறிவிக்கப்படும்.

——-

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு மாரடைப்பு உள்ளதாக பொய்யாகத் தெரிவித்து கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் (ராகமை) அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர், தனக்கு நெஞ்சில் வலி இருப்பதாகக் கூறி அனுமதியாகியுள்ளதோடு, அவ்வேளையில் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்துள்ளதாக, பிரரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த நபர் கடந்த செவ்வாய்க்கிழமை (16) ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தான் வெளிநாட்டிலிருந்து வந்த விடயத்தை மறைத்துள்ளதோடு, மூச்சு தொடர்பான பிரச்சினைகள், காய்ச்சல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மருத்துவர்கள் கேட்டுள்ளபோதிலும் அவர் அவற்றையும் மறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு ECG சோதனைகள் மேற்கொண்ட போது அதில் மாரடைப்பு தொடர்பில் குறிப்பிடுமளவில் எந்தவிதமான மாற்றங்களும் காணப்படவில்லை.

அதன் பின்னர் அவர் சாதாரண வார்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த நாள் அவருக்கு, இருமல், காய்ச்சல் என்பன காணப்பட்டுள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, வார்ட் பதிவாளர் அவரது உறவினர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவர் இத்தாலியிலிருந்து வந்தமை தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் மேற்கொண்ட சோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வார்டில் உள்ள மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்டோரை தனிமைப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த நபர், இச்செயலை வேண்டுமென்றே செய்துள்ளார் என்பது தெரியவந்த நிலையில், அவர் மீதும், இக்குற்றத்தை மேற்கொள்ள துணையாக இருந்தவர்களுக்கும் எதிராக வத்தளை நீதவான் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டினார்.

ராகமை மருத்துவமனையில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts