சிரஞ்சீவி படத்திலிருந்து த்ரிஷா விலகல்

கருத்து வேறுபாடு காரணமாக சிரஞ்சீவி படத்திலிருந்து விலகிவிட்டதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.

‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ராம் சரண் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 152-வது படமாகும்.

ஒளிப்பதிவாளராக திரு, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன், இசையமைப்பாளராக மணிசர்மா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் தலைப்பு ‘ஆச்சாரியா’ என்று சமீபத்தில் படவிழா ஒன்றில் கலந்துகொண்டபோது சிரஞ்சீவி கூறினார். படக்குழு ரகசியம் காத்தபோது, அனுமதி இல்லாமல் போகிற போக்கில் வாய் தவறி தலைப்பைச் சொன்னதற்காக இயக்குநரிடம் மன்னிப்பும் கோரினார். இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு நாயகியாக த்ரிஷா நடித்து வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினர் உறுதிப்படுத்தாமல் இருந்தார்கள்.

தற்போது இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாக த்ரிஷா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “சில சமயங்களில் ஆரம்பத்தில் சொன்ன, கலந்துரையாடிய விஷயங்கள் நடக்கும்போது வித்தியாசமாக மாறும். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சிரஞ்சீவியின் திரைப்படத்திலிருந்து நான் விலகிவிட்டேன்.

படக்குழுவுக்கு வாழ்த்துகள். என் அன்பார்ந்த தெலுங்கு ரசிகர்களே, மீண்டும் உங்களை ஒரு நல்ல படத்தின் மூலம் சந்திப்பேன் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் த்ரிஷா.

இந்தப் படத்துக்காக ஒரு ஊரையே அரங்கமாக அமைத்துப் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இதில் சிரஞ்சீவியுடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதையும் படக்குழு உறுதிப்படுத்தவில்லை. இந்தப் படம் தொடர்பான அனைத்து தகவல்களிலுமே படக்குழு அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts