சிஏஏ பட்டியலில் முஸ்லிம்களை நீக்கியது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களை இணைக்காதது ஏன் என, காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக விளக்கக் கூட்டங்கள், பேரணிகளையும் பாஜகவினர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 1) கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ” மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ சட்டத்தால், எந்த ஒரு நபரும் குடியுரிமையை இழக்கமாட்டார்கள்.

எதிர்க்கட்சிகள் சேர்ந்து சிறுபான்மை மக்களைப் பதற்றத்தில் வைத்துள்ளன. குடியுரிமை வழங்கத்தான் சிஏஏ சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. யாருடைய குடியுரிமையையும் பறிக்க அல்ல என்று சிறுபான்மை மக்களிடம் நான் உறுதியளிக்கிறேன். அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கும்வரை நாங்கள் நிறுத்த மாட்டோம்” என தெரிவித்தார்.

இதுதொடர்பாக, ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினர் யாரும் பாதிக்க மாட்டார்கள் என, உள்துறை அமைச்சர் சொல்கிறார். அது சரி என்றால், இந்த சட்டத்தால் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாட்டுக்கு அவர் சொல்ல வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பலன்கள்தான் கிடைக்கும் என்றால், சிஏஏ பட்டியலில் முஸ்லிம்களை நீக்கியது ஏன்?” என ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Related posts