சிறிலங்கா அரசு சிங்கள மக்களிடம் வீர வசனம் ஜெனிவாவில் பம்மிய வசனம்..!

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்க்கும்போது நாடு இராணுவ மாயமாகும் என்ற அச்சம் தோன்றுகின்றது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, நூறு நாட்களில் இந்த நிலை என்றால் தேர்தலுக்கு பின்னர் நாட்டின் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்து நூறு நாட்களை கடந்துள்ளது. என்றாலும் மக்கள் மயமான அரசாங்கம் என்பதை ஒப்புவிக்க முடியாமல் போயுள்ளது. மக்கள் எதிர்பார்த்த எதுவும் இந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ள முடியாமல் போயிருக்கின்றது.

அத்துடன் அரசாங்கத்தின் கொள்கையை கூட பாதுகாத்துக்கொள்ள தவறி இருக்கிறது குறிப்பாக ஜெனிவா மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிரான பிரேரணையில் இருந்து விலகுவதாக பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கையில், இது சிங்கள நாடு. எமக்கு எதிராக யாருக்கும் நடவடிக்கை எடுக்கமுடியாது போன்ற வீர வசனங்களால் கதைத்தார்.

ஆனால் ஜெனிவாவில் இலங்கை பல் இன, பல்தேசிய நாடு, அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்படுவதாகவும் அனைவருக்கும் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

இது இவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஒன்றையும் சர்வதேசத்துக்கு வேறு ஒன்றையும் தெரிவிக்கும் நிலையே எடுத்துக்காட்டுவதாகவும் கூறினார்.

Related posts