வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆளுநர் வழங்கியுள்ள ஆலோசனை

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான தொழிவாய்ப்பை பெற்றுக்கொள்ள அரசு தரும் வாய்ப்பை உரிய நேரத்தில் சரியான ஒழுங்கு முறையை பின்பற்றி பெற்றுக்கொள்வதற்கான முயற்சியை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு வடக்குமான ஆளுநர் பி எம் எஸ் சார்ள்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொழில்வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தில் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த திட்டத்தின் கீழ் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லை 45 ஆக அதிகரித்திருப்பதாகவும், விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் இம் மாதம் 14 ஆம் திகதி என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், வயதெல்லை 38 ஆக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமையை ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளோர் பல்கலைக்கழக ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கற்கை நெறி அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட டிப்ளோமா கற்கை நெறியை 2019.12.31 ஆம் திகதி பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். விண்ணப்பிப்போர் குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தர வதிவிடத்தைக்கொண்டிருத்தல் வேண்டும்.

பதிவு 2020.01.01 திகதி அன்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்து 1 வருடத்துக்கும் மேற்பட்ட காலம் தொழில் இன்றி இருப்பதை கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரினால் உறுதி செய்யவேண்டும். விண்ணப்ப படிவத்தை ஜனாதிபதி செயலாகத்தின் www.presidentsoffice.gov.lk என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் டிப்ளோமாதாரிகளிற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் 2020, நிறுவன முகாமைத்துவ மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, ஜனாதிபதி அலுவலகம், காலி முகத்திடல், கொழும்பு – 01 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் பட்டதாரியாயின் பட்டதாரி / (மாவட்டத்தின் பெயர்) என்றும் டிப்ளோமாதாரி / (மாவட்டத்தின் பெயர்) என்றும் குறிப்பிடப்படுதல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Related posts