ஜனாதிபதி தேர்தல்: 5 தமிழ் கட்சிகளின் இறுதி முடிவு நாளை

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் தமிழ் மக்கள் திட்டவட்டமான முடிவினை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதற்கான இறுதி முடிவை நாளை 30ஆம் திகதி எடுக்கவுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுக்கும் 5தமிழ் அரசியல் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பிறைட் இன் விருந்தினர் விடுதியில் நேற்று முற்பகல் 11மணிக்கு ஆரம்பமாகி மூன்றரை மணி நேரம் இடம்பெற்றது.

சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக அதன் தலைவரும் பாராளுமன்ற உருப்பினருமான மாவை சேனாதிராஜா, வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புளொட் தலைவரும் பாராளுமன்ற உருப்பினருமான த.சித்தார்தன், ரெலோ சார்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர்ச.குகதாஸ், மூத்த உறுப்பினர் கென்ரி மகேந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக அதன் ஊடகப் பேச்சாளர் த.அருந்தவபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர். இக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி ஆராய்ந்தோம். தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான தேசியக் கட்சிகள் தமிழ் தேசியக் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

ஏனெனில் எமது கோரிக்கைகள் என்பது ஒரு நாட்டுக்குள் தமிழர்களுக்கு இனப் பிரச்சினையை தீர்க்கக் கூடிய விதமாக மட்டுமல்லாது தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நெருக்கடிகளை தீர்ப்பதற்கானதே.

ஆனால் தென்னிலங்கையில் உள்ள பிரதான தேசியக் கட்சிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் எமது கோரிக்கைகளை இனவாத கோரிக்கைகளாக பூதாகரமாக காட்டுகின்றனர். இக் கட்சியினர் எமது கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் தமிழ் மக்கள் திட்டவட்டமான முடிவுகள் எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவர்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Related posts