இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் : நளின்

நாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொண்டு ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்யவேண்டும் என்றால் நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம்.

அதன் மூலம் சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்தலாம் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் வங்கி(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் பல ஆட்சித்தலைவர்களின் காலம் இருந்தது. ஆனால் எதிர்வரும் காலம் மக்களின், விவசாயிகளின் காலமாக ஏற்படுத்தவேண்டும். அதற்கான சந்தரப்பம் எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலின் மூலம் கிடைக்கின்றது. அதற்கு தகுதியுள்ள தலைவரை உருவாக்கும் தேவை மக்கள் மத்தியில் இருந்து தலைதூக்கியுள்ளது.

மேலும் பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர்களின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு குறித்து மட்டும் தான் பேசுகிறார்.

நாட்டிற்கு பாதுகாப்பு மாத்திரம்தான் பிரதானமாது என்றால் ராணுவ ஆட்சியை ஏற்படுத்தினால் சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்தலாம்.

அவ்வாறு இல்லை. மக்கள் தரப்பில் இருந்து செயற்படும் தலைவரே நாட்டுக்கு தேவை.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட தலைவர்கள் இது தொடர்பில் உகந்த முடிவு எடுக்க செயற்பட்டு வருகிறார்கள்.

எனவே மக்களின் தேவையை கருத்திற்கொண்டு சாதாரண மக்களின் உணர்வுகளை மதிக்கக்கூடிய ஒருவரையே நாங்கள் நியமிப்போம். இதன் மூலம் அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மக்கள் யுகத்தை ஏற்படுத்துவோம் என்றார்.

Related posts