மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 72 சதவீத வாக்குப் பதிவு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், அரசியல் நோக்கர்கள் இரு தரப்பான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

17-வது மக்களவைக்கான தேர்தல் நடந்து வருகிறது. 7 கட்டங்களாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் 2-வது கட்டமாக 95 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் தமிழக்தில் வேலூர் தொகுதி நீங்கலாக 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒருதொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

இதில் தமிழகத்தில் மட்டும் 72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹூ தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 73 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை 72 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

பொதுவாக வாக்கு சதவீதம் அதிகரிக்கும் போது, மக்கள் எடுக்கும் முடிவு ஏதாவது அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதையே காட்டுகிறது. கடந்த முறை 39 தொகுதிகளில் கன்னியாகுமரி, தர்மபுரி தொகுதிகளைத் தவிர 37 தொகுதிகளிலும் அதிமுக வென்றது. இந்த முறை மக்கள் எந்த மாதிரியான முடிவை எடுத்துள்ளார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை மாநில அரசுக்கு எதிரான ஒரு மனநிலையும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டுடனும் மக்கள் வாக்களித்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர் மாலன் நாரயணன் கூறியதாவது:

” தமிழகத்தில் 73 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு இருக்கக்கூடும். இது ஒருகுறிப்பிடத்தகுந்த வாக்குப்பதிவு சதவீதம்தான். இந்த 73 சதவீதம் என்பது, இயல்பாக அல்லது செயற்கையாகவோ மக்கள் தூண்டப்பட்டு வாக்களித்திருக்கலாம் என்பதை காட்டுகிறது.

கடந்த 1967-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடித்தபோது 76 சதவீதம் வாக்குகள் பதிவானது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 73 சதவீதம் வாக்குகள் பதிவானது, அதிமுக 37 தொகுதிகளில் வென்றது. இந்த முறை 70 முதல் 73 சதவீதம் வாக்குகள் பதிவானது எதைக் காட்டுகிறது என்றால், மக்கள் ஏதாவது ஒரு தரப்பினருக்கு,அரசியல் கட்சிக்கு அதிகமாக வாக்களித்திருக்கலாம். அது திமுக தலைமையிலான கூட்டணிக்கு கூட இருக்கலாம்.

அதேசமயம், திமுக தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வாக்கு மையத்தை கைப்பற்றுகிறார்கள் என்று புகார் அளித்தார்கள், இந்த செயல்பாடு அவர்கள் தேர்தலில் வெற்றி பெறும் நம்பிக்கையில் இல்லை என்பதை காட்டுகிறது. தொடக்கத்தில் திமுக 40 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறினார்கள். என்னைப் பொருத்தவரை திமுகவுக்கு சாதகமாக எந்தவிதமான அலையும் வீசவில்லை. ஆனால், அவர்களுக்கு சாதகமான போக்கு தென்பட்டது” .

இவ்வாறு மாலன் தெரிவித்தார்.

அதிமுகவைச் சேர்ந்த மூத்த தலைவரும், பெயரை வெளியிட விரும்பாதவர் ஒருவர் கூறுகையில், ” இப்போதுள்ள மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், பழைய முறையிலான பிரச்சாரங்கள் எல்லாம் எடுபடாது. புதிய வாக்காளர்கள், முதல்முறை வாக்காளர்கள் அதிகமாக வந்துவிட்டார்கள். 30 வயதுக்குட்ட வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் நன்றாக வாக்குப்பதிவு பதிவாகி இருக்கிறது. என்னைப் பொருத்தவரை திமுக கூட்டணி 30 தொகுதிகளில் வரை வெல்லக்கூடும் ” எனத் தெரிவித்தார்.

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடிஸ் மையத்தின் துணை பேராசிரியர் சி. லட்சுமணன் கூறியதாவது:

” தேர்தலில் பதிவான வாக்குப்பதிவை பார்க்கையில், திமுக அனைத்து இடங்களிலும் வெல்லக்கூடும்.அதிமுக மிகப்பெரிய கூட்டணியை அமைத்தபின் திமுகவின் நம்பிக்கையை சற்று குறைந்தது. அதன்பின் சமூக ஊடங்களில் பிரச்சாரத்தையும் வேகப்படுத்தியது திமுக. அதற்கு ஆதரவாக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கேஎம்டிகே, சிபிஐ, சிபிஎம், விசிகே, ஐஜேகே கட்சிகளும் களமிறங்கின. திமுக எம்.பி. கனிமொழி வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய ரெய்டு, நிச்சயம் எதிர்மறையாக அரசுக்கு இருக்கும். இந்த தேர்தல் முடிவுகள் பலருக்கு அதிர்ச்சிகரமான முடிவுகளை அளிக்கும்.

என்னைப் பொருத்தவரை கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் குறிப்பிடத்தகுந்த வாக்குகள் எதையும் பெறாது. அதாவது, மக்கள் இனிமேலும் நடிகராக இருந்து அரசியலுக்குவருபவர்களுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள். அதேபோல, பாமக கட்சியும், வன்னியர் சமூகத்தினர் அதிகமாக வாழும் பகுதிகளில் கூட தங்களின் வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ளமுடியாமல் தோல்வி அடையும் ”

இவ்வாறு லட்சுமணன் தெரிவித்தார்.

அரசியல் ஆய்வாளர் ஜான் ஆரோக்கிய சாமி கூறியதாவது:

” தமிழகத்தைப் பொருத்தவரை பணம்தான் இங்கு ராஜா. எந்த முன்னணிக்கும் இங்கு சாதகமாக அலை வீசவில்லை. அரசுக்கு எதிரான நிலைப்பாடு இருக்கிறதென்றால், காலையிலேயே அதிகமான வாக்குப்பதிவு இருந்திருக்க வேண்டும், மக்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்திருப்பார்கள். ஆனால், காலை நேரத்தில் அதிகமான மக்கள் வாக்கு மையத்தில் இல்லை. வாக்கு சதவீதம் என்பது மாலை நேரத்தில்தான் அதிகரிக்கத் தொடங்கியது.

சென்னையில் வாக்குப்பதிவு மிக மோசமாக இருந்தது, நகர்புறங்களிலும் அதேபோன்றுதான் இருந்தது. கிராமப்புறங்களில்தான் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக காணப்பட்டது.

என்னைப் பொருத்தவரை மதரீதியாக மக்கள் பிரியவில்லை. ஏராளமான வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையத்துக்கு சென்று அங்கு தனது பெயர் இல்லாமல் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்கள். அதேபோல மக்கள் வாக்களிக்கும் வகையில் சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு போக்குவரத்து வசதிகளையும் மோசமாக செய்திருந்தது. ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து கொண்டு சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்லவில்லை.

மாநில அளவிலான வாக்குப்பதிவை கணக்கிடுவதற்கு பதிலாக, மண்டல வாரியாக பார்க்க வேண்டும். சாதி ரீதியிலான வாக்குகள் மாறாதவை. இதில் மாறக்கூடிய காரணி என்பது வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதுதான்.மிகப்பெரிய ஆளுமைகளான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் இல்லாததன் வெற்றிடத்தை இரு கட்சிகளும் உணர்வார்கள்.

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், இந்த முறையும் தனித்து போட்டியிட்டு பிரச்சாரத்துக்கு சென்றிருப்பார். அதேபோல கருணாநிதியும், மத்திய, மாநில அரசுக்கு எதிராக நிலவும் மக்களின் மனநிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றி இருப்பார்.

என்னைப் பொருத்தவரை திமுக, அதிகமு கட்சிகளும் குறிப்பிடத்தகுந்த இடங்களில் வெல்லும். இதில் அதிகமான இடங்களில் அதாவது 25 இடங்களுக்கு குறைவில்லாமல் திமுக வெல்லும். தமிழகத்தில் இந்த முறை பிரதமர் மோடி, ராகுல் காந்தி, ரூபாய் நோட்டு ஆகிய மூவருக்கும் இடையேதான் போட்டி. வாக்குகளுக்கு பணம் அளிக்க அதிமுக முயற்சித்தால், அது பலவீனமான தலைமையைத்தான் வெளிக்காட்டும். அதன்விளைவு தேர்தல் முடிவு பாதகமாகத்தான் இருக்கும் ”

இவ்வாறு ஆரோக்கியசாமி தெரிவித்தார்.

Related posts