உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19: 16

உமது கைகளில் எனது ஆவி.
சகோதரன். பிரான்;சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

இயேசு, பிதாவே, உம்முடைய கைகளில் என்ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார், இப்படிச்சொல்லி, ஜீவனை விட்டார். நு}ற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு, மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். இந்தக் காட்சியைப்பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். லூக்கா 23:46-4

தமிழில் மிகஅழகாக சொல்லுவார்கள், தெரிவுச்சுயாதீனம் இல்லாவிட்டால் கீழ்படிவதில் அர்த்தமில்லையென்று. இதன் கருத்து தெரிவில் தீர்மானம் இல்லா விட்டால் கீழ்படிவதில் பயனில்லை. விலக்கப்பட்ட கனியை புசிப்பதும் புசியாதிருப்பதும் ஆதாம் ஏவாளின் தெரிவுச் சுயாதீனத்திற்குள் இருந்தது.

இதை நாம் ஆதியாகமம் 2:16-17 இல் காணலாம். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி, நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆனால் அவர்களின் தெரிவு தேவ விருப்பத்திற்கு ஏற்ற கீழ்படிதலாக இருக்கவில்லை. கீழ்ப்படியாமையை தெரிந்தெடுத்ததால் பாவமும் சாபமும் உலகத்தில் பிரவேசித்தது.

ஆனால் இயேசுவிடம்; மிக உன்னதமான ஓர் தெரிவுச்சுயாதீனம் இருந்தது. அது பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படியான கீழ்ப்படிதலில் இருந்தது. நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ள மாட்டான். நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார் யோவான் 10:17-18.

இதுவரை பிதாவின் சித்தப்படி கீழ்ப்படிந்தவர், இந்த இறுதிக் கட்டத்திலும், பாவமற்றவராகிய இயேசு நமக்காக பாவமாகிய நிலையில் பிதாவாகிய தேவனிடத்தில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். நமது பாவத்தை சுமந்த இயேசு கீழ்ப்படிதலின் உயர்வைக் காண்பிக்கும்படியாக, உலகத்தின் பாவங்களை சுமந்த நிலையில், அதாவது பாவத்தின் மிகுதியினால் பரிசத்த தேவனின் தெடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இறுதியாக பிதாவே எனக்கூப்பிட்டு தன் ஜீவனை விட்டார். காரணம் கீழ்ப்படியாமையால் வரும் பாவத்தின் சம்பளமாகிய மரணம் என்ற கொடிய நித்திய வேதனைக்குள் நீங்களும் நானும் ஆளாகக்கூடாது என்பதற்காக சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டு கீழ்படிந்தார்.

அன்பின் அலைகள் வாசகநேயர்களே, தேவன் இன்று உங்களுக்கு இயேசுவின் சிலுவை மரணத்தையும், அதனால் மானிடமும், உலகமும் அடையும் நன்மை களையும் அறிந்து கொள்ளும்படியான ஓர் மிகப்பெரிய வாய்ப்பைத் தந்துள்ளார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள கீழ்வரும் வேதப்பகுதியை மிகத்தியானத்துடனும், நன்றியுணர்வுடனும் வாசிப்போம்.

எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது. இளங்கிளையைப் போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார், அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை. அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்கரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் அசட்டை பண்ணப்பட்ட வரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமா யிருந்தார். அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம். அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார். அவரை எண்ணாமற் போனோம்.

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் (காயங்களினால்) குணமாகிறோம்;. (பாவமென்கிற மரணத்தில் இருந்து விடுதலை பெறுகிறோம்). ஏசாயா 53.இந்த முழு அதிகாரத்தையும் வாசித்தால் இயேசுவின் பாடுகளின் கொடுரத்தை அறியமுடியும்.

தேவனுக்குப் பிரயமான மக்களே, நாம் மேலே வாசித்தோம் அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார் என்று. இயேசு சிலுவையில் ஆணிகள் கடாவப்பட்டு, முள்முடிசூட்டப்பட்டு, இரத்தம் தோய்ந்த கண்களுடாக சிலுவையில் தொங்கிய நிலையில் ஏதோ ஒன்றை காண்கிறார். அதுதான் அவரின் ஆத்தும வருத்தத்தின் பலன்.

இதை நாம் வெளிப்படுத்தல் 7:9,14 ஆகிய வார்த்தைகளில் காணலாம். இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அதற்கு நான், ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன், இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள், இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.

பரலோகத்தில் நாம் அனைவரும் இயேசுவின் இரத்தத்தினால் நமது பாவங்கள் சாபங்களில் இருந்து விடுதலை பெற்றவர்களாக தேவசந்நிதானத்தில் வெண்அங்கி தரித்தவர்களாக நிற்பதைக்காணவிரும்புகிறார். அப்போதுதான் அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக்கண்டு திருப்தியாவார். நாம் அவரின் மரணத்தால் விடுதலை பெற மனதற்று வாழ்வோமானால் அவரின் இரத்தம் தோய்ந்த கண்கள் எம்மை துக்கத்தோடு காணும்.

நாம் எம்மை ஆராய்ந்து பார்ப்போம். அவரின் ஆத்தும வருத்தத்தின் பலனுக்கு பாத்திரனாக உள்ளேனா என்று? உன்னுடைய உள்ளத்தில் இந்த சிந்தனை பலனைத்தரவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். அந்த தேவனின் எதிர்பார்ப்பை உன் உள்ளத்தால் நிறைவேற்ற இந்த ஜெபத்தை என்னுடன் சேர்ந்து தேவனிடம் ஒப்புக்கொடு.

அன்பின் இயேசு அப்பா, இரத்தம் சிந்துதல் இல்லாமல் உலக மக்கள் பாவங்கள் சாபங்களில் விடுதலை பெற முடியாது என்பதை அறிந்து, எம்மை உமது இரத்தத்தினால் விடுதலை ஆக்கிநீரே அதற்காக உமக்கு நன்றி அப்பா. இந்த உமது அன்பின் தியாகத்தை அறியாது இதுவரை வாழ்ந்து வந்து விட்டேன். அதற்காக இன்று உம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னித்து உமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டு என்னை சகல பொல்லாங்கிற்கும் விலக்கிக்காத்து வழி நடத்தும் பிதாவே, ஆமேன்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro.Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark

Related posts