காணாமல் போனோருக்கு என்ன நேர்ந்தது ?

அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெற்ற மன்னார் மனிதப்புதைகுழி மாதிரிகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிக்கும், நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிக்கும். தொடர்பில்லை எனக்கூறி நழுவிவிட முடியாது.

அவ்வாறெனின் காணாமல் போனோருக்கு உண்மையிலேயே என்ன நேர்ந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து பெறப்பட்ட ஆறு மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா அனாலிட்டிக்ஸ் ஆய்வுகூடத்திற்கு காபன் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டிருந்தது.

அதன் முடிவு அறிக்கையின்படி மன்னார் மனிதப்புதைகுழியிலுள்ள மனித எச்சங்கள் 1499 – 1719 ஆம் ஆண்டு காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியதுடன் தொடர்ந்து கூறுகையில்,

மன்னார் மனிதப்புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில்

வெளியிடப்பட்டுள்ள காபன் பரிசோதனை அறிக்கை குறித்து சந்தேகங்கள் இருக்குமாயின், அதனை மீண்டும் வேறொரு ஆய்வு நிறுவனத்திடம் கையளித்து மீளவும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு மீண்டும் அனுப்பப்படுகின்ற நிறுவனத்தின் முடிவு அறிக்கையில் எவ்வளவு தூரம் உண்மைத்தன்மை காணப்படும் என்பதில் சந்தேகங்கள் உள்ளன.

மேலும் அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெற்ற மன்னார் மனிதப்புதைகுழி மாதிரிகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிக்கும், நாட்டில் யுத்தம்

இடம்பெற்ற காலப்பகுதிக்கும் தொடர்பில்லை எனக்கூறி நழுவிவிட முடியாது. அவ்வாறெனின் காணாமல் போனோருக்கு உண்மையிலேயே என்ன நேர்ந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு செயற்படாவிடின் தமிழ் மக்களின் நம்பிக்கை முழுவதுமாக இழக்கப்படுகின்ற நிலை உருவாகும்.

அத்தோடு மன்னார் மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டிருந்த மனித உடல்கள் ஓர் ஒழுங்கின் அடிப்படையில் காணப்படவில்லை. முறையற்ற விதத்தில் ஒழுங்கீனமாகப் போடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன. எனின் அவை எதோவொரு விடயத்தை மறைக்கும் நோக்கில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே இவ்விடயம் தொடர்பான உண்மை நிலையை அரசாங்கம் கண்டறிய வேண்டும் என்றார்.

Related posts