இளையராஜா வழக்கில் நீதிபதிகள் கருத்து

இளையராஜா இசையமைத்துள்ள 4,500 பாடல்களை எக்கோ மற்றும் அகி நிறுவனங்கள் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா சென்னைஉயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது எக்கோ, அகிநிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்,

‘‘இளையராஜா எல்லோரையும் விட தான் மட்டுமே மேலானவர் என நினைக்கிறார்’’ என்றார்.

அதற்கு இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ்பராசரன், ‘‘இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் தான் என்றும், இசையுலகில் அவர் கடவுளுக்கு அடுத்தபடியாக பார்க்கப்படுகிறார்’’ என்றும் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘இளையராஜா தரப்பில் இசையுலகில் அவர் எல்லோருக்கும் மேலானவர் என கூறப்பட்டது.

எங்களைப் பொருத்தமட்டில் இசையுலகில் மும்மூர்த்திகளான முத்துச்சாமி தீட்சிதர், தியாகராஜர், சியாமாசாஸ்திரி ஆகிய மூவர் மட்டுமேஅனைவருக்கும் மேலானவர்கள். இவர்கள் மட்டுமே தங்களை அனைவருக்கும் மேலானவர்கள் எனக்கூறிக்கொள்ள முடியும். தவிர, அவர்களைப் போல இளையராஜாகூற முடியாது’’ என கருத்து தெரிவித்தனர்.

இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், ‘‘காப்புரிமை விவகாரத்தில்அவருக்குள்ள உரிமை தொடர்பாகவும், இசையுலகில் அவரது பங்களிப்பு குறித்துமே இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் எனமூத்த வழக்கறிஞர் கருத்து தெரிவித்திருந்தார்.

மற்றபடி இளையராஜா அமைதியானவர். அடக்கமானவர். பண்பானவர். சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதித்து நடக்கக் கூடியவர்’’ என்றார். அதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்.24-க்கு தள்ளிவைத்தனர்.

Related posts