கொரோனா நிவாரண உதவிகள் ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்

கொரோனா நிவாரண உதவிகள் செய்துவருவது குறித்து ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

நடிகர் சூர்யா ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை பாராட்டி நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள ஆடியோவில் பேசி இருப்பதாவது:-

“இந்த நெருக்கடியான தருணத்தில் தொடர்ந்து ரசிகர்கள் நிவாரண பணிகளில் ஈடுபடுவது சாதாரண விஷயம் இல்லை. இதை யாருக்காவது நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. நமது மன திருப்திக்காக செய்கிறோம். தொடர்ந்து எவ்வளவு நாள் செய்ய முடியும் என்று பாருங்கள். தன்னை வருத்திக் கொள்ளாமல் செய்ய பாருங்கள். பாதுகாப்பாகவும் இருங்கள், நிஜமாகவே யாருக்கு ரொம்ப கஷ்டம் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டும் போய் சேருகிறதா என்று ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்து கொள்ளுங்கள். பிளாஸ்டிக் பாட்டில்கள் பார்த்தேன். அதை கூடியவரை தவிர்க்க பாருங்கள். நிறைய தம்பிகள் நிறைய இடங்களில் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் உதவிகள் செய்வதை கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டே இருப்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு நிகழ்வை ஒருநாள் செய்வது வேறு. தொடர்ச்சியாக செய்வது வேறு. மனதார வாழ்த்துகிறேன்“

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

Related posts