போராட்டம் நிச்சயம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும்

கத்தியின்றி, இத்தமின்றி, தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக முன்னெடுக்கப்படும் போராட்டம் நிச்சயம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரைட் பியூச்சர் இன்டனேசனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை (30) பளை நல்வாழ்வு மேம்பாட்டு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ஆயுதம் ஏந்தியவர்களின் தன் நம்பிக்கையின் காரணமாகவே முப்பது வருடங்கள் அவர்களால் அரசாங்கத்தை புறக்கணித்து வாழ முடிந்ததாக தெரிவித்தார்.

அதற்கு அப்பால் இன்று மக்களை எவ்வாறு அபிவிருத்திப் பணிகளில் பங்கெடுக்கச் செய்ய முடியும் என்பதே தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதான நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களின் பின்னணியில் தென்படக்கூடிய தமிழ் மக்களின் எதிர்கால நெருக்கடிகளை புரிந்து அதற்கு ஏற்றவாறு காய்களை நகர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கெடுபிடிகளால் வடக்கையும், கிழக்கையும் இழக்க வேண்டி ஏற்படுமோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இதை பற்றி சிந்தித்து செயலாற்றக் கூடிய காலம் தற்போது உதயமாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆகவே அரசியல் முன்னெடுப்புகளுக்கு சமாந்தரமாக இளைஞர்களை இணைத்து அவர்களுடாக பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசரமும், அவசியமும் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts