நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உத்தியோகத்தர் கடத்தப்பட்டமை தொடர்பில் அந்த தூதரகம் வசமுள்ள அனைத்து தகவல்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 25 ஆம் திகதி நவம்பர் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாக ஸ்ரீஸ் இன்ஃபோ என்ற இணையத்தளம் இலங்கையில் இயங்கும் இணையத்தளம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டது.

இந்த ஊடக செய்தி தொடர்பாக சுவிட்ஸர்லாந்தின் வெளிவிவகார அமைச்சு அளித்த தகவலின் படி இலங்கையில் உள்ள தூதரக தகவல்களை வெளியிடுமாறு கோரி அடையாளம் தெரியாத சிலர் குறித்த அதிகாரியை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சுவிட்சர்லாந்து அரசாங்கம் இலங்கை அதிகாரிகளை கேட்டுக்கொண்டது.

அதற்கமைவாக குற்றபுலனாய்வு திணைக்களத்தால் கடந்த 27 ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய சம்பவம் தொடர்பில் குற்றப்புலானாய்வு திணைக்களம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் சுவிட்சர்லாந்து தூதரகம் நேற்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதற்கமைய, சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளிடம் உடனடியாக முறையிடப்பட்டதாகவும் அதற்கமைய முன்னெடுக்கப்படும் பொலிஸ் விசாரணைகளுக்கு இலங்கை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்தது.

அதேபோல் பாதிப்புக்குள்ளான அதிகாரி மற்றும் அவரது உறவினர்களின் உடல்நலம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் அந்த அரசாங்கம் தெரிவித்திருந்தது.

பாதிக்கப்பட்ட அதிகாரியின் உடல்நிலை வாக்குமூலம் வழங்கும் அளவுக்கு தேறவில்லை எனவும் அதில் குறிப்பிடபட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை குற்ற புலனாய்வு பிரிவில் பணியாற்றும் உறுப்பினரையும் அவரது குடும்பத்தினரையும் சுவிட்சர்லாந்தில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை சுவிஸ் அரசு நிராகரித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் அவ்வாறான ஒரு கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என சுவிட்சர்லாந்து தூதரகம் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த நாட்டின் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் நாட்டின் இராஜதந்திர வரலாற்றில் ஏற்பட்ட கரும் புள்ளி எனவும் இதன் மூலம் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் பெயர் அபகீர்த்திக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து தூதரகம் வசமுள்ள அனைத்து தகவல்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் சி.சி.டி.வி பரிசோதனை பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடத்தல் செயற்பாட்டை முன்னெடுத்தவர்கள் குற்றப்புலானாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்தியிருந்த போதும் அந்த செயற்பாடு சம்பவம் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளை திசை திருப்பும் நடவடிக்கை எனவும் ஊடகப்பேச்சாளர் அலுவலகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts