ஜினிகாந்தும் – கமல்ஹாசனும் இணைந்து போட்டியிட திட்டமா?

வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்தும் – கமல்ஹாசனும் இணைந்து போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். 25 ஆண்டுகால காத்திருப்புக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்தே முற்றுப்புள்ளி வைத்தார். ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்.

தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார். அதன் பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும், பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினார்.

ரஜினி போல பல ஆண்டுகளாக இழுக்காமல் ஜெயலலிதா மறைந்த சில மாதங்களிலேயே தீவிர அரசியலில் கமல்ஹாசன் இறங்கினார். டுவிட்டர் மூலம் ஆட்சியை விமர்சித்தார். இந்நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவரது கட்சி களம் இறங்கி சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றது.

கமலுக்கு நகர்ப்புறங்களில் அதிக வாக்குகள் கிடைத்தன. எனவே கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். தான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கூட தனது அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறார்.

ரஜினியும், கமலும் சினிமாவில் அறிமுகமானது முதலே நண்பர்கள். அரசியலிலும் அப்படி இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே இருந்து வருகிறது. கமல் பெற்ற வாக்கு சதவீதம், ரஜினிக்கு இருக்கும் நிர்வாகிகள் பலம், கிராமப்புற செல்வாக்கு இவற்றை எல்லாம் கணக்கு போட்டு பார்த்த இருவருக்கும் பொதுவான நண்பர்கள், இருவரும் இணைந்தால் நிச்சயம் ஆட்சியை பிடிக்கலாம் என்ற ரீதியில் ஆலோசனை கூறி வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தலில் ரஜினி ஆதரவுடன் கமல் களம் இறங்க தயாராகி விட்டார் என்கிறார்கள். கமலுக்கு ஆதரவு தெரிவிப்பது மூலம் தனது மன்றத்துக்கு இருக்கும் மக்கள் ஆதரவை தெரிந்து கொள்ள ரஜினிக்கும் நல்ல வாய்ப்பாக அமையும்.

இதை ரஜினி- கமல் கூட்டணிக்கான தொடக்கமாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள். கமலுக்கு தேர்தலை சந்தித்த அனுபவம் இருக்கிறது. ரஜினிக்கு கிராமப்புறங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இருவரும் இணைவது என்பது இருவருக்குமே நன்மை தரும் ஒன்றாக இருக்கும்.

இந்த் நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கால சினிமா கலை பயணத்தை கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ‘உங்கள் நான்’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய திரைப்பட பாடல்களை பாடி அசத்தினார்.

ஆரம்பத்தில் அரசியலற்ற கலைநிகழ்ச்சியாகத் தொடங்கி, பின்னர் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், “ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து அரசியலில் செயல்பட வேண்டும். அவர்கள் விரும்பும் அளவுக்கு ஆட்சியை தந்துவிட்டு பின்னர் அவர்களது தம்பிகளுக்கு வழிவிட வேண்டும்” என்று கூறி அரசியல் பேச்சை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ரஜினிகாந்த் பேசும்போது,

“2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஆவோம்” என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று அனைவருமே சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது.

நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும் என்று கூறினார்.

தமிழக முதலமைச்சர் குறித்தும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பற்றியும் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பாக பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரஜினிகாந்தின் இந்த பேச்சை தொடர்ந்து, வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்தும் – கமல்ஹாசனும் இணைந்து போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ரஜினி, கமல் தரப்பில் முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினி, கமல் இணைந்து செயல்பட நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜயும் இவர்களுடன் கைகோர்ப்பாரா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

Related posts