கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் பணம்

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை, தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே பதில் அளிக்கப்பட்டு விட்டதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட முத்துகுமரன் தெருவில் ரூபாய் 37 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொளத்தூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தமது முன்முயற்சியில் கொளத்தூர் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை விரிவாகக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது பற்றி தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

வருமான வரித்துறைக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இதுபற்றி ஏற்கனவே பதில் சொல்லி விட்டதால், வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கைகளை வைப்பதாகவும், ஆனால் அவை நிறைவேற்றப்படுவதாக தெரியவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related posts