இந்த தேசத்துக்கு கடவுள் அருள் புரியட்டும் : ப.சிதம்பரம்

இந்தியப் பொருளாதார பின்னடைவை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த தேசத்துக்கு கடவுள் அருள் புரியட்டும் என தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான ப.சிதம்பரம் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது அவர் தனது குடும்பத்தினரின் உதவியுடன் ட்விட்டரில் சில கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று (செப்.16) தனது பிறந்தநாளை ஒட்டி தன் குடும்பத்தினர் வாயிலாக சிதம்பரம் ஒரு ட்வீட்டைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “எனது குடும்பத்தினர் இன்று எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நண்பர்கள், கட்சி சகாக்களின் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். எனக்கு 74 வயது என்றனர். ஆம் எனக்கு 74 வயதாகிவிட்டது. ஆனால், மனதளவில் நான் இளைஞன். எனது குடும்பத்தினர் வாயிலாக நான் இந்த ட்வீட்டைப் பதிவு செய்கிறேன்.

இன்றைய தினம் எனது எண்ணங்கள் பொருளாதாரத்தைப் பற்றியே உள்ளன. ஆகஸ்ட் மாதத்துக்காக ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் -6.05 ஆக சரிவு கண்டிருக்கிறது.

ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் சராசரியாக ஆண்டுக்கு 20% என்றளவில் இல்லாவிட்டால் எந்த ஒரு தேசமும் 8% ஜிடிபி-யை நெருங்க இயலாது. இந்த தேசத்துக்கு கடவுள் அருள் புரியட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts