இந்திய அணிக்குள் பிளவு தன்னிச்சையாக முடிவு..?

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த சில நாட்களிலேயே, அணிக்குள் பிளவு இருப்பது வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் கேப்டன் கோலிக்கு ஆதரவாக சிலர் இருப்பதாகவும், துணைக் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சில வீரர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், தோல்விக்குப் பொறுப்பேற்று கோலியை கேப்டன்ஷிப்பில் இருந்து மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக ரோகித் சர்மாவை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

இந்தியில் வெளிவரும் டேனிக் ஜாக்ரன் நாளேடு இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் சேர்ந்து கொண்டு அணியில் தன்னிச்சையாக பல முடிவுகளை எடுக்கிறார்கள். கோலி மற்றும் சாஸ்திரி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல தவறான முடிவுகளை எடுத்துள்ளனர்.

உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்திடம் மோசமாக தோற்றதன் மிகப்பெரிய காரணம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோரின் ஒருதலைப்பட்ச சிந்தனைதான். அச்சத்தின் காரணமாக யாரும் அவர்களை எதிர்க்கவில்லை, ஏனென்றால் இந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் (சிஓஏ) நியமித்த வாரியத்தின் தலைமை நீதிபதி வினோத் ராய் கோலியைப் போன்றவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ரவி சாஸ்திரியும்- வீராட் கோலியும் தங்களுக்கு தேவைப்பட்ட வீரர்களை மட்டுமே தேர்வு செய்கிறார்கள். மற்றவர்களிடம் கலந்து பேசி எந்த முடிவும் எடுப்பதில்லை, இவர்களின் செயல்பாட்டால்தான் அணியில் நல்லவிதமான சூழல் கெட்டு பிளவு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக விராட் கோலி தனக்கு தேவையான, தன்னுடைய பேச்சைக் கேட்டு நடக்கும் வீரர்களுக்கு அணியில் முன்னுரிமை தருவதாகவும், ரோகித் சர்மா அறிவுறுத்தும் வீரர்களை தேர்வு செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

அம்பத்தி ராயுடு, மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், சுக்மான் கில் போன்ற பேட்ஸ்மேன்களை நடுத்தர வரிசையில் கொண்டு வர முடியும். இப்போதாவது எல்லோரும் இணைந்து ஒரு வலுவான நடுத்தர வரிசையைத் தேடுவதில் ஒன்றுகூட வேண்டும்.

குறிப்பாக 4-வது வரிசைக்கான வீரர்கள் தேர்வில் அம்பத்தி ராயுடுவை தேர்வு செய்வதா, அல்லது விஜய் சங்கரை தேர்வு செய்வதா என்பதில் கடும் போட்டி இருந்தது. இதில் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டதே ஒருதரப்பான முடிவு என்று அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ரோகித் சர்மா இருவரும் தவிர்க்க முடியாதவர்கள் இவர்களைத் தேர்வு செய்யாமல் இருக்க முடியாது. ஆனால், மற்ற வீரர்களை தேர்வு செய்யும் விதத்தில் சார்புத்தன்மை கையில் எடுக்கப்படுகிறது. குறிப்பாக விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் குறிப்பிட்ட சார்புடனும், அளவுகோலுடன் விளையாடும் 11 வீரர்களைத் தேர்வு செய்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக மிகவும் மோசமாக செயல்பட்ட போதிலும் கூட அவருக்கு அணி நிர்வாகத்தின் ஆதரவு இருந்ததால், அவர் தொடர்ந்து அணியில் நீடித்தார். 4-வது வரிசைக்கு என தேர்வு செய்யப்பட்ட ராகுல், தவானின் காயத்தால் தொடக்க வீரராக அனுப்பப்பட்டார். தொடக்க வீரராக வந்த மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

இதேபோல யஜுவேந்திர சாஹல் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியில் இருப்பதால், தொடர்ந்து மோசமாகப் பந்து வீசியபோதிலும் அவர் இந்திய அணியில் தக்கவைக்கப்படுகிறார். பேட்டிங்கிலும் பெரிய அளவுக்கு சாஹலால் எந்தவிதமான பலனும் இல்லை, பந்துவீச்சிலும் ஜொலிக்காத போது கோலியின் ஆதரவால் தொடர்ந்து வாய்ப்பு பெற்றுள்ளார்.

இப்போதுள்ள சூழலில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப், சாஹல் இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அணி வீரர்களுக்கு இடையே எழுந்துள்ள ஈகோ பிரச்சினை இன்னும் பெரிதாகவில்லை. விரைவில் இதுதொடர்பாக எந்த வீரராவது பேசும்போது அது பெரிதான அளவுக்கு வெடிக்கும். பல வீரர்கள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணையும் விரும்பவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து இருவரும் வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் ரன்கள் எடுக்க வில்லை என்றால், அன்றைய தினம் இந்தியாவின் மிடில் ஆர்டரில் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு பிளான் பி இல்லை. டாப் ஆர்டர், இரண்டு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு பந்து வீச்சாளர்கள் போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்ற அனுமானத்தை அவர்கள் இன்னும் பின்பற்றி வந்தனர், ஆனால் அது நடக்கவில்லை.

உலக கோப்பை தோல்வியால் இந்தியா மீண்டும் ஒரு புதிய நடுத்தர வரிசையைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 18 மாதங்களுக்குப் பிறகு, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலகக் கோப்பையும், 2023-ல் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பையும் நடைபெற உள்ளது. இதற்காக நமது அணியை இப்போதே தயார் செய்ய வேண்டும்.

இந்த இரண்டு பெரிய போட்டிகளிலும் மகேந்திர சிங் டோனி அணியின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் ஐந்து, ஆறு மற்றும் ஏழு எண் இடங்கள் காலியாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தினர் எதிர்கால அணியை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.

விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாக ஒரு அற்புதமான செயல்திறன் கொண்டவர் என்பதில் சந்தேகம் இல்லை, அவர் தனியாக பல போட்டிகளில் வென்றுள்ளார். ஆனால் வெளிநாட்டில் ஒரு கேப்டனாக, போட்டிக்கு முன் ஆடுகளத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

குறிப்பாக பிசிசிஐயை நிர்வகிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் ஆதரவை ரவி சாஸ்திரி பெற்று இருப்பதால், சாஸ்திரி, விராட் கோலி எந்தவிதமான முடிவுகளை எடுத்தாலும் அதற்கு ஆதரவு இருந்து வருகிறது என்று நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக உருவாக்க வேண்டும் என்றும் வீரர்களிடையே பேசப்படுகிறது என்றும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

Related posts