மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: வைகோவின் மனு ஏற்கப்பட்டது

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் வில்சன் சண்முகம், என்.ஆர். இளங்கோ ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக சார்பில் சந்திரசேகரன், முகமது ஜான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக ஆதரவுடன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சுயேச்சைகள் 4 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரின் மனு ஏற்கப்படுமா? இல்லையா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியது. அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் தலைமை செயலகம் வருகை தந்தனர்.

மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் மனு ஏற்கப்பட்டது. இதனை அவரது வக்கீல் உறுதிப்படுத்தி உள்ளார்.

வைகோவின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால் திமுக சார்பில் நான்காவது வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள என்.ஆர். இளங்கோ நாளை தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் கூறப்படுகிறது.

Related posts